நர்சு வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை


நர்சு வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
x

நெல்லையில், நர்சு வீட்டில் 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர் அதே பகுதியில் உள்ள மேலும் 2 வீடுகளில் திருட முயற்சி செய்துள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு சரண்யா நகரை சேர்ந்தவர் செல்லபெருமாள். ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவருடைய மனைவி செல்வி (வயது 55). இவர் நெல்லை அருகே கீழநத்தத்தில் கிராம சுகாதார செவிலியராக (நர்சு) உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், வீட்டில் மேஜையில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார். செல்வி நேற்று அதிகாலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோல் அதே பகுதியில் உள்ள மேலும் 2 வீடுகளில் மர்ம நபர்கள் திருட முயற்சி செய்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன், ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இந்த துணிகர சம்பவம் குறித்து ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story