ஆலங்குளத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இடமாற்றம் - இளைஞர்கள் சாதனை...!


ஆலங்குளத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் நான்கு வழிச்சாலை பணிக்காக வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட்டு உள்ளது.

தென்காசி

நெல்லை தென்காசி நான்குவழிச்சாலை பணிக்காக நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஒப்பந்ததாரர்களால் சாலையோர மரங்கள் வெட்டப்பட்டும், சில இடங்களில் மாற்று இடங்களில் மறுநடவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஆலங்குளம் பஸ் நிலையம் கீழ்புறம் சுமார் 200 ஆண்டுக்கு மேலான பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. சாலை பணிக்காக இந்த மரம் கிளைக்கள் வெட்டும் பணி கடந்த வாரம் துவங்கியது. இந்த ஆலமரத்தை மறுநடவு செய்ய வேண்டும் என முடிவு செய்த ஆலங்குளம் பசுமை இயக்கம் தலைவர் சாமுவேல் பிரபு, அசுரா நண்பர்கள் ராஜா, குணா ஆகியோர் நெடுஞ்சாலைத்துறையினரிடம் அனுமதி பெற்றனர்.

இதனையெடுத்து அந்த மரம் வெட்டபடாமல் நிறுத்தப்பட்டது. நேற்று இரவு 2 கிரேன், 2 ஜேசிபி உதவியுடன் 16 டன் எடை உள்ள ஆலமரம் வேருடன் அகற்றப்பட்டு ஆலங்குளம் தொட்டியான்குளத்தின் கரையோரம் நடப்பட்டது.

இந்த பணியில் ஆலங்குளத்தில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள், ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மரத்தை மாற்றி நடுவதற்கு முயற்சி எடுத்த ஆலங்குளம் பசுமை இயக்கம் மற்றும் அசுரா நண்பர்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள்.


Next Story