கடல் சீற்றம் எதிரொலி 2 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை


கடல் சீற்றம் எதிரொலி 2 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:47 PM GMT)

கடல் சீற்றம் எதிரொலி 2 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுகிறது. அதே சமயம் தேங்காப்பட்டணம் கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறை முகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று சின்னமுட்டம் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதைத்தொடர்ந்து சின்ன முட்டம் துறை முகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நாட்டுப்படகுகளும் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதே போல ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் 200-க்கும் மேற்பட்ட கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தேங்காப்பட்டணம் கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த 1,500 விசைப்படகுகளும் மற்றும் நாட்டுப்படகுகளும் மீன் பிடிக்க செல்லவில்லை.

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்று விட்டது. அதைத்தொடர்ந்து மீன் சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story