2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு அதிர்ச்சியா? எதிர்பார்த்ததா?


2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு அதிர்ச்சியா? எதிர்பார்த்ததா?
x

2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு அதிர்ச்சியா? எதிர்பார்த்ததா? என்றுபொருளாதார நிபுணர், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரியலூர்

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூ.500, ரூ.1,000-ம் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. வீடுகளில் வைத்திருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் பணத்தை மாற்றுவதற்கு பொதுமக்கள் பட்ட கஷ்டத்திற்கு அளவே இல்லை. இந்த நிலையில் தற்போது ரூ.2 ஆயிரம் நோட்டு வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரைத்தான் செல்லுபடியாகும் என்ற நிலையில் அந்த ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்று இருக்கிறது.

இந்த அறிவிப்பு ஏதும் அதிர்ச்சியாக தெரிகிறதா? அல்லது எதிர்பார்த்ததா? என்பது குறித்து பொருளாதார நிபுணர், பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுகுறித்த விவரம் வருமாறு:-

பாதிப்பு இல்லை

நிதி ஆலோசகர் வ.நாகப்பன்:- உலகம் முழுவதும் ரூபாய் நோட்டுகளை பொறுத்தவரையில் ரூ.1, ரூ.2, ரூ.5 என்றும், அடுத்தகட்டமாக ரூ.10, ரூ.20, ரூ.50 தொடர்ந்து ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 என்று தான் இருப்பது வழக்கம். இப்படி இருந்தால் தான் குறைந்த தொகையை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள எளிதாக இருக்கும் என்பது நடைமுறையில் உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படுவதாக அறிவித்து எடுக்கப்பட்ட முடிவு நல்ல முடிவுதான். பொருளாதார ரீதியாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஜி.பே, கியு.ஆர். கோடு உள்ளிட்ட ஆன்லைன் மூலம் பரிவர்த்தனைகள் செய்வதால் ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் இருந்து எடுப்பதால் சாமானியர்கள் எவரும் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள், ஒரு சில தொழில் அதிபர்களுக்கு பாதிப்புகள் வரலாம். 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு சட்டம் கொண்டு வரும்போது எந்தவித தகவல்களும் தெளிவாக தெரிவிக்காமல் வெளியிட்ட அறிவிப்பால் பொதுமக்கள் குழப்பத்திற்கு ஆளானார்கள். ஆனால் தற்போது பொதுமக்களுக்கு இதுதொடர்பாக எந்தவித சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக ரிசர்வ் வங்கி, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், அதற்கான பதில்களை தெளிவாக வழங்கி உள்ளது. அத்துடன் பணத்தை மாற்றிக்கொள்வதற்கும் போதிய கால அவகாசமும் வழங்கி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் எந்தவித பதற்றமோ, குழப்பமோ ஏற்படவில்லை. மத்திய அரசு மட்டுமே குறிப்பிட்ட பணம் செல்லாது என்று அறிவிக்க முடியும் என்பதால், ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டை புழக்கத்தில் இருந்து எடுப்பதாக போதிய தகவல்களுடன் அறிவித்து உள்ளது. 2016-ம் ஆண்டு பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்று தற்போது போதிய கால அவகசாம், தகவல்கள் தெளிவாக கொடுத்திருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நாட்டில் 80 சதவீத பரிவர்த்தனை யு.பி.ஐ., என்ற ஆன்லைன் மூலம் நடப்பதால் தற்போது ரூ.2 ஆயிரம் புழக்கத்தில் இருந்து எடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

மறைமுக சலுகை

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம்:- கருப்பு பணத்தை ஒழித்துவிடுவோம், கள்ளப்பணத்தை ஒழித்துவிடுவோம் என்று கூறி கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்திற்கு கொண்டு வந்தது. இது தனிநபரிடம் குவிந்ததை பார்த்து இருக்கிறோம். ரிசர்வ் வங்கி அச்சிட்ட ரூ.2 ஆயிரம் பண நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறையத் தொடங்கியது. சுமார் ரூ.6 லட்சத்து 73 ஆயிரம் கோடி மதிப்பில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. அவற்றுள் ரூ.3 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. மீதம் உள்ள சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் ரூபாய் பண நோட்டுகள் கருப்பு பணமாக மாறி உள்ளது தெரியவருகிறது. இப்போது கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.2 ஆயிரம் பண நோட்டுகளை ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றுக்கொண்டது வேடிக்கையாக உள்ளது. காரணம் ரூ.1,000 ரூபாய் நோட்டுகள் கருப்பு பணத்திற்கு காரணம் என்று கூறிய மத்திய அரசு, ரூ.2 ஆயிரம் நோட்டை அச்சிட முடிவு செய்தது விந்தையாக உள்ளது. நாட்டில் கருப்பு பணம் புழங்குவது அனைவருக்கும் தெரிந்தது. அதற்காக உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு பதிலாக பொதுமக்களுக்கு தொல்லை தர கூடிய இதுபோன்ற நடவடிக்கைகள் தேவையற்றது. கருப்பு பணம் என்பது யாரிடம், எவ்வளவு உள்ளது என்பது மத்திய அரசுக்கு தெரியும். அவர்களிடம் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலமாக பல கோடி ரூபாய்களை பெற்ற பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்பது இயலாதது. அதன் காரணமாகத்தான் இந்த அறிவிப்பிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுகிறார்களே ஒழிய, சட்டவிரோதமாக பண மதிப்பிழப்பை வாபஸ் என்று கூறவில்லை. எனவே இது கருப்பு பணம் வைத்துள்ளவர்களுக்கு மறைமுக சலுகையாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது.

ஏழை, எளிய மக்களை பாதிக்காது

தா.பழூரை சேர்ந்த டீ கடைக்காரர் சாமிநாதன்:- ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது எங்களுக்கு சில நோட்டுகள் கிடைத்தன. நாளடைவில் அதன் புழக்கம் குறைய தொடங்கிவிட்டது. என்னிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழங்கி 2 ஆண்டுகள் இருக்கும். ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்ப பெறுவது என்னை போன்ற ஏழை, எளிய மக்களை எந்த வகையிலும் பாதிக்காது. பெரிய பணக்காரர்களிடம் ஒருவேளை ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருக்கலாம். அவர்களிடம் இருந்தால் சட்டப்பூர்வமாக அதனை செல்லத்தக்கதாக மாற்ற ஆவண செய்து கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கையால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. நாங்கள் வழக்கம் போல் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்.

வியாபாரிகளுக்கு சிரமம்

வணிகர் நல சங்க செயலாளர் குமார்:- ரிசர்வ் வங்கி திடீரென 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது என்ற அறிவிப்பு வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஒரு நாளைக்கு 10 நோட்டுகள் மட்டுமே ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வணிக நிறுவனங்களில் கொடுத்து வாங்கும் நோட்டுகள் அதிகளவில் இருந்தால் அதனை வியாபாரிகள் வங்கிகளில் கொண்டு சென்று மாற்றுவதில் சிரமம் ஏற்படும். மேலும் மொத்த வியாபாரம் செய்ய வெளியூருக்கு செல்லும் பொழுது அதிகளவில் தொகையை எடுத்துச் செல்வதற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக இருந்தால் எளிதாக இருக்கும். எனவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வியாபாரிகளுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாதாரண பொதுமக்கள் ஒரு நாளைக்கு பத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது ஏற்புடையது. அதே நேரத்தில் வியாபாரிகளுக்கு கொஞ்சம் கூடுதல் சலுகைகள் வழங்கினால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story