அரசியல் சட்டத்திற்கு எதிராக, அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த பதவியை பயன்படுத்துகிறார் தம்பிதுரை மீது மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு.


அரசியல் சட்டத்திற்கு எதிராக, அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த பதவியை பயன்படுத்துகிறார் தம்பிதுரை மீது மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு.
x
தினத்தந்தி 2 Jan 2017 10:41 AM GMT (Updated: 2 Jan 2017 10:41 AM GMT)

அரசியல் சட்டத்திற்கு எதிராக, அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த பதவியை பயன்படுத்துகிறார் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.


சென்னை,

கட்சி விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தம்பிதுரை இருந்தால், துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அறிக்கை கொடுக்கட்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"முதல்-அமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்" என்று பாராளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைகிறேன்.

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தவுடன் இரவோடு இரவாக அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனியாக பஸ்களில் அழைத்துச் சென்று ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக முதல்-அமைச்சராக தேர்வு செய்தார்கள். அதில் கூட நடைமுறை சிக்கல்கள் பல இருந்தாலும், மாநிலத்தின் நலன் கருதி, மாநில நிர்வாகம் சீர்கெட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் பொறுப்புள்ள எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.க. எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் அமைதி காத்தது.

தமிழக கவர்னரும் அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலையை கருதி, உடனடியாக அ.தி.மு.க.வின் ஏற்பாட்டிற்கு சம்மதம் தெரிவித்து, நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழக முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த சூழ்நிலையில், பதவியேற்று 10 நாட்களுக்குள்ளாகவே, "ஓ.பன்னீர்செல்வம் தன் முதல்-அமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பார்" என்றும், "சசிகலா முதல்-அமைச்சராக வேண்டும்" என்றும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை சற்றும் உணராத அ.தி.மு.க. அமைச்சர்கள் வெளியிட்ட செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இன்னும் சொல்வதென்றால், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கச் சென்ற நாளில், இதுபோன்ற பேட்டிகளை அளித்து தமிழக முதல்-அமைச்சர் என்ற பதவியை சிறுமைப்படுத்திய சம்பவங்களை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்போது, தமிழக முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எல்லாம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், திடீரென்று பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருக்கும் மு.தம்பிதுரை "தமிழக முதல்-அமைச்சர் பதவியை“ சிறுமைப்படுத்தி, அரசியல் சட்டப்படி அவருக்கு கவர்னர் செய்து வைத்துள்ள பதவிப் பிரமாணத்தை கொச்சைப்படுத்தி, "சசிகலா முதல்வராக வேண்டும்" என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது முழுக்க முழுக்க துதி பாடும் செயலாகவும், அத்தகைய செயலுக்கு அரசியல் சட்ட நெறிமுறைகளை காவு கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக "துணை சபாநாயகர்" லெட்டர் பேடை பயன்படுத்தி இப்படியரு அறிக்கை விட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான செயலாகும்.

ஆகவே, கவர்னர் உடனடியாக முதல்-அமைச்சருக்கு உள்ள பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதேநேரத்தில், துணை சபாநாயகர் பதவியைப் பயன்படுத்தி இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதை மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

ஒருவேளை கட்சி விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தால் தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, எவ்வளவு அறிக்கைகள் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். அது அவரது கட்சிப் பணி. ஆனால் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தவும் தனது துணை சபாநாயகர் பதவியை பயன்படுத்த வேண்டாம் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story