காந்திவிலியில் வீடு புகுந்து பச்சிளம் ஆண் குழந்தை கடத்தல் போலீஸ் விசாரணை


காந்திவிலியில் வீடு புகுந்து பச்சிளம் ஆண் குழந்தை கடத்தல் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 2 Jan 2017 8:52 PM GMT (Updated: 2 Jan 2017 8:52 PM GMT)

காந்திவிலியில் வீடு புகுந்து பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய மர்ம ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

காந்திவிலியில் வீடு புகுந்து பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய மர்ம ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தம்பதி

மும்பை காந்திவிலி ஜனதா காலனியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சாகில் பாவடியா(வயது23). இவரது மனைவி ஹினா(20). இந்த தம்பதிக்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த ஹினாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது.

சம்பவத்தன்று இரவு வேலை விஷயமாக சாகில் பாவடியா வெளியே சென்றிருந்தார்.

இரவு 8.45 மணியளவில் ஹினா தனது மாமியாரிடம் குழந்தையை கவனித்து கொள்ளும்படி கூறிவிட்டு, அருகில் உள்ள பொதுகழிவறைக்கு சென்றிருந்தார்.

குழந்தை கடத்தல்

அந்த சமையத்தில் அவரது மாமியார் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில், 9 மணியளவில் ஹினா வீட்டிற்கு வந்தபோது படுக்கையில் இருந்த குழந்தையை காணவில்லை. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மாமியாரிடம் கேட்டார்.

அப்போது தான் அவருக்கும் குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. யாரோ மர்ம ஆசாமி வீடு புகுந்து குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதுபற்றி காந்திவிலி போலீசில் அவர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்திச்சென்ற மர்மஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story