வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்-2 பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை பிளஸ்-1 வகுப்புக்கு மாற்றம் வருமா?


வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்-2 பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை பிளஸ்-1 வகுப்புக்கு மாற்றம் வருமா?
x
தினத்தந்தி 31 March 2017 10:15 PM GMT (Updated: 31 March 2017 8:23 PM GMT)

பிளஸ்-1 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றுவது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை, 

வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்-2 வகுப்பு பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் பிளஸ்-1 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றுவது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாடத்திட்டம்

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் தயாரித்து 10 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. பொதுவாக 5 வருடங்களுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த வகுப்புகளுக்கு பாடத்திட்டம் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்த வருடம் ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக அரசு சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானம் அப்படியே இருக்கிறது. எனவே ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா? என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.

மாற்றம் வருமா?

ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிக்கூடங்கள் தொடங்க உள்ளன. பள்ளிக்கூடங்கள் திறந்த அன்றே இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களை அச்சடித்து விட்டது. எனவே பிளஸ்-2 வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை.

தற்போது 1-வது வகுப்பு முதல் 9-வது வகுப்பு வரை பாடப்புத்தகம் அச்சிடப்பட்டு வருகிறது. இந்த பாடப்புத்தகங்கள் அச்சிட்ட பிறகு 11-வது வகுப்பு பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. எனவே பிளஸ்-1 வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா? என மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

அரசு முடிவு எடுக்கும்

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ்-1 வகுப்புகள் தொடங்க இன்னும் 2½ மாதங்களே உள்ளன. இந்நிலையில் அவசர அவசரமாக வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்-1 வகுப்பு பாடத்திட்டத்தை மாற்றுவது சிரமம். இருப்பினும் இது குறித்து அரசு தான் இறுதி முடிவை எடுக்கும் என்றனர்.

பிளஸ்-1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வந்த பிறகு, அந்த மாணவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் போது புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story