ரம்ஜான் பண்டிகை: நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 4,900 டன் அரிசி; எடப்பாடி பழனிசாமி உத்தரவு


ரம்ஜான் பண்டிகை:  நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 4,900 டன் அரிசி; எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 24 May 2017 5:45 PM GMT (Updated: 24 May 2017 1:34 PM GMT)

ரம்ஜான் பண்டிகையையொட்டி நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 4 ஆயிரத்து 900 டன் அரிசி வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு உள்ள ஜெயலலிதாவின் வழியில் நடக்கும் தமிழக அரசு, அவர்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.

அந்த வகையில், இஸ்லாமிய மக்கள் புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க ஜெயலலிதா, தனது முந்தைய ஆட்சி காலத்தில் அதாவது 9.11.2001 அன்று ஆணையிட்டார்.

அதன்படி பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய பெருமக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

ரூ.12 கோடியே 60 லட்சம் செலவு

கடந்த ஆண்டுகளை போலவே, இந்த ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்கள் சிரமம் இன்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஆவணங்களை உரிய ஆய்வு செய்து பள்ளி வாசல்களுக்கு தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்படி, 4 ஆயிரத்து 900 டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.12 கோடியே 60 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்படும்.

இதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடையும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story