ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டனில் தீபா - தீபக் சண்டை போட்டது ஏன் திடுக்கிடும் தகவல்கள்


ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டனில் தீபா - தீபக் சண்டை போட்டது ஏன் திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 13 Jun 2017 10:25 AM GMT (Updated: 13 Jun 2017 10:25 AM GMT)

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை கைப்பற்ற தீபா-தீபக் போட்ட சண்டை குறித்து திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளது.

சென்னை

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீடு புகழ் பெற்றது. இந்த வீட்டை தீபாவின் பாட்டி (ஜெயலலிதாவின் தாய்) சந்தியா என்ற வேதவல்லி பெயருக்கு 1967-ல் ஜெயலலிதா வாங்கி இருக்கிறார். இந்த சொத்தின் அப்போதைய விலை வெறும் 1 லட்சத்து 32 ஆயிரம்தான். தாயின் பெயரில் வேதா இல்லம் என்று பெயரும் சூட்டினார். 1971-ல் சந்தியா மரணம் அடைந்ததும் தாயின் சொத்து பிள்ளைக்கு என்ற அடிப்படையில் ஜெயலலிதா பெயருக்கு மாற்றப்பட்டது.

இப்போது இந்த வீட்டின் ஒரு பகுதி ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி இருக்கிறது.ஜெயலலிதா மறைந்ததும் அந்த வீட்டில் சசிகலா தங்கியதும் எதிர்ப்பு கிளம்பியது.  போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல முனைகளில் இருந்தும் வலுத்தது.

இதையடுத்து போயஸ் கார்டன்  இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற மந்திரிசபை ஒப்புதலை பெற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கிடப்பில் வைத்துள்ளார். இதை அறிந்த தீபாவும், தீபக்கும் அத்தையின் வீட்டை  கைப்பற்ற திட்டம் போட்டதாக கூறப்படுகிறது. அதற்காக தீபக் சில நாட்களாக போயஸ்கார்டன் இல்லத்திலேயே தங்கி இருந்து இருக்கிறார்.

தீபாவும் போயஸ் இல்லத்தை கைப்பற்ற காய்களை நகர்த்துவதை அறிந்த சசிகலா தரப்பு தீபக்கை அழைத்து “உனக்கு மட்டுமே சொத்து சேர்வதாக இருந்தால் நாங்கள் விட்டுத் தருகிறோம். அதற்கு முதலில் உன் அக்காவிடம் இருந்து ஆட்சேபனை  இல்லை என்று எழுதி வாங்கு” என்று கூறியதாக கூறப்படுகிறது.இதுபற்றி  பேசவே தீபக், தீபாவை அழைத்து இருக்கிறார். முன்னதாக தி.நகரில் உள்ள கட்சி பிரமுகர் ஒருவரது  பூ கடைக்கு போன் செய்து பூமாலையும் வரவழைத்து வைத்துள்ளார்.

அக்காவிடம் கையெழுத்து வாங்குவதற்காக பத்திரமும் தயாராக வைத்திருந்தார். தீபா வந்ததும் இதுபற்றி தீபக் பேசி  உள்ளார். நீ கையெழுத்து போட்டு தா. இல்லாவிட்டால் நம் இருவருக்கும் வீடு கிடைக்காமல் போய்விடும் என்று கூறி உள்ளார்.

ஆனால் தீபா அதை ஏற்க மறுத்ததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அத்தை வீட்டில் எனக்கும் பங்கு உண்டுடா என்று ஆவேசமாக சத்தம் போட்டுள்ளார். அதன்பிறகு ஜெயலலிதா படத்தை வணங்கி விட்டு அங்கிருந்த சசிகலா படங்களை எடுத்து வீசிய பிறகு அக்கா-தம்பிக்கு இடையே நடந்த சண்டை பாதுகாவலர்களுக்கும், தீபாவுக்கும் இடையே மாறி இருக்கிறது.

படம் பிடித்த பத்திரிகை நிருபர்கள் மீது தாக்குதல், தீபாவை வெளியேற்றுதல் என்று அடுத்தடுத்த கட்டத் துக்கு நிலைமை மாறி இருக்கிறது. சொத்துச்சண்டையும், குடும்பச் சண்டையும் இணைந்து நடுரோட்டிற்கு வந்துள்ளது.

டெல்லி சென்று பிரதமரை சந்திக்க போவதாகவும், சில சட்ட  நடைமுறைகளை மேற்கொள்ள போவதாகவும் தீபா அறிவித்துள்ளார். அடுத்து என்ன நடக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.

தி.நகரில் ஒரே வீட்டில் தான் மேல்தளத்தில் தீபக்கும், கீழ்தளத்தில் தீபாவும் வசிக்கிறார்கள். சண்டை போடுவதற்காக போயஸ் தோட்டம் வரை போக வேண்டுமா? இந்த கேள்விகள்தான் தலைசுற்ற வைக்கிறது. ஏன் நடந்தது? என்னதான் நடந்தது...?

தீபாவின் தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள வீடு ஒருமுறை ஏலத்துக்கு வந்துள்ளது. அப்போது ஜெயலலிதா, சசிகலாவிடம் சொல்ல, சசிகலா டாக்டர் வெங்கடேஷ் பெயரில் வீட்டை மீட்டு இருக்கிறார். இதுபற்றி டாக்டர் வெங்கடேசுக்கும், தீபாவுக்கும் இடையே சமீபத்தில் வாக்கு வாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் எரிச்சல் அடைந்த தீபா தி.நகர் வீட்டிலும், அடையாறில் உள்ள வீட்டிலுமாக மாறி மாறி வசித்து வருகிறார்.

இத்தனை ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் எழாத நிலையில் வீட்டு விவகாரம் விவாதத்துக்கு வர காரணம் தீபா அரசியல் களத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது தான் என்கிறார்கள்.ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் யாருக்கு சொந்தம்? நேரடி வாரிசுகள் இல்லாத நிலையில் உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில் ரத்த வாரிசுகளுக்கு உரிமை உண்டு என்கிறது சட்டம்.

இதை அறிந்துதான் சில சட்ட நடைமுறைகளை தீபா மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அக்கா-தம்பிக்கு இடையே பாசம் இருந்தாலும் இருவரும் பயணிக்கும் பாதை வெவ்வேறானது. தீபக், சசிகலாமற்றும் அவரது  குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார். இந்த விஷயத்தில் அக்கா-தம்பிக்கு இடையே ஒருமித்த கருத்துக்கள் இல்லை.


Next Story