மானிய கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்படும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை இன்று கூடுகிறது


மானிய கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்படும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை இன்று கூடுகிறது
x
தினத்தந்தி 14 Jun 2017 12:15 AM GMT (Updated: 13 Jun 2017 6:44 PM GMT)

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று (புதன்கிழமை) கூடுகிறது.

சென்னை,

இந்த ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 23-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

அதன்பின்பு பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க் களின் விவாதம் மார்ச் மாதம் 24-ந் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

மானிய கோரிக்கை


இந்த நிலையில் தமிழக சட்டசபை இன்று (புதன் கிழமை) மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத் தொடர் மொத்தம் 24 நாட்கள் நடைபெறும். இதில் அரசு துறைகளின் மானிய கோரிக்கை குறித்து விவாதிக்கப் படும்.

இந்த கூட்டத்தொடர் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் கடுமையான போட்டி கூட்டத்தொடராக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆளும் கட்சியான அ.தி.மு.க., எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரன் என உடைந்து இருக்கும் நிலையில் நடத்தப்படும் கூட்டத் தொடர் இதுவாகும்.

அ.தி.மு.க.வில் எந்த எம்.எல்.ஏ. யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது புதிராக இருக்கிறது. எனவே இந்த கூட்டத்தொடரின் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை


இந்த கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுப்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டம் சுமார் ½ மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கொறடா சக்கரபாணி, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பிச்சாண்டி, டி.பி.எம். மைதீன்கான், பூங்கோதை ஆலடி அருணா, கீதாஜீவன் உள்பட எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற கூட்டத்தில் என்னென்ன பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

எம்.எல்.ஏ.க்களுக்கு பணம்


சசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டதாக தனியார் டி.வி.யில் வெளியான ரகசிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் கேள்வி- பதில் நேரத்துக்கு பிறகு தி.மு.க. தரப்பில் இந்த விவகாரம் சம்பந்தமாக கேள்வி எழுப்ப இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை, வறட்சி, குடிநீர் பிரச்சினை, மாட்டிறைச்சி விவகாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கேள்வி எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று நடக்க உள்ள வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திலும் கலந்து கொண்டு விவாதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தரப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதால் இன்று நடக்க உள்ள சட்டமன்ற கூட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story