அரியலூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில் 27 பேர் காயம்


அரியலூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில் 27 பேர் காயம்
x
தினத்தந்தி 22 Oct 2017 9:00 PM GMT (Updated: 22 Oct 2017 8:05 PM GMT)

அரியலூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகள் முட்டி தள்ளியதில் 27 பேர் காயம் அடைந்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொம்மேடு கிராமத்தில் உள்ள வீரனார்கோவில் திடலில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய போட்டியில், அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சென்றன. இதனைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை கொம்பால் தூக்கிவீசி பந்தாடின. இதில் மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, லால்குடி, புள்ளம்பாடி, அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், திருமானூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கி காளைகளை மடக்கினர்.

இதில் காளைகள் முட்டி தள்ளியதில் 27 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், விழாக்குழுவினரால் பீரோ, கட்டில், சைக்கிள், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை, திருச்சி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கொம்மேடு பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story