தமிழக அரசு கலைப்பா? என்ற தலைப்பில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் கட்டுரை


தமிழக அரசு கலைப்பா? என்ற தலைப்பில் நமது எம்.ஜி.ஆர்.  பத்திரிகையில் கட்டுரை
x
தினத்தந்தி 21 Nov 2017 10:28 AM GMT (Updated: 21 Nov 2017 10:44 AM GMT)

தமிழக அரசு கலைப்பா? என்ற தலைப்பில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் கட்டுரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை

அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது அணிகள் இணைந்தபின்னர், கட்சியிலிருந்து சசிகலா குடும்பத்தினரை ஓரங்கட்டும் நடவடிக்கைகளில் இருவரும் இறங்கினர். சென்னை வானகரத்தில் கடந்த செப்டம்பரில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோருக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

அதன் பின் வருமான வரித்துறை அதிகாரிகள், இளவரசியின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக்கின் தங்கை ‌ஷகிலா, ஜெயலலிதாவிடம் முன்பு உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோரை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு சோதனையும் நடத்தப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்கள் வருமான வரிசோதனைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில்  நமது எம்.ஜி.ஆர்.  பத்திரிகையில்  ’தமிழக அரசு கலைப்பா... ’ என்ற தலைப்பில்  இன்று வெளியான செய்தியில், ’எடப்பாடி அரசு வருகிற 25 அல்லது 26ஆம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வரவிருப்பதாகத் தெரிகிறது. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளிட்ட 23 அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.

அமைச்சர்களின் பினாமி சொத்து உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆளுநர் வசம் உள்ளது. இதேபோல கடந்த 1976-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி தி.மு.க. ஆட்சியை இரவோடு இரவாகக் கலைப்பதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடவடிக்கை எடுத்தார். அப்போது ஆளுநரின் ஆலோசர்களாக ஆர்.வி.சுப்பிரமணியம், பி.கே. தவே போன்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அதேபோல், தற்போதும் ஆளுநரின் ஆலோசகர்களாக ராஜகோபால் மற்றும் சோமநாதன் போன்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதையறிந்த ஆளும் தரப்பினர் ஆதாரங்களை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நெருக்கடியை எப்படிக் கையாளுவது என்ற அதிர்ச்சியில் குழம்பிப் போயிருக்கிறார்கள்’ என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story