ஒட்டுமொத்த தமிழகமும் சேர்ந்து போராடும் சூழ்நிலை உருவாகும் பாரதிராஜா பேட்டி


ஒட்டுமொத்த தமிழகமும் சேர்ந்து போராடும் சூழ்நிலை உருவாகும் பாரதிராஜா பேட்டி
x
தினத்தந்தி 22 May 2018 11:00 PM GMT (Updated: 22 May 2018 9:19 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் சேர்ந்து போராடும் சூழ்நிலை உருவாகும் என்று இயக்குனர் பாரதிராஜா கூறினார்.

சென்னை,

‘ஸ்டெர்லைட்’ ஆலையால் தூத்துக்குடி மக்கள் படும் கஷ்டங்களை எடுத்துரைக்கும் வகையில் பிரியன் எழுதிய பாடலுக்கு, ஜி.எஸ்.மதன் இயக்கத்தில், பிரவீன் பீட்டர் பெர்ணான்டோ இசையில் ‘தடை அதை உடை’ என்ற தலைப்பில் குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இயக்குனர் பாரதிராஜாவின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், மக்கள் பாதுகாப்பு கழக தலைவர் டிராபிக் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு குறுந்தகட்டை வெளியிட்டனர். பின்னர் பாரதிராஜா நிருபர்களிடம் கூறியதாவது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று பல மாதங்களாக பல்வேறு இயக்கங்கள் போராடுகிறது. தூத்துக்குடி சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும், சுகாதார கேட்டுக்கும் எதிராக மக்களே நடத்தும் போராட்டம். இந்த போராட்டத்தை அடக்குவதற்கு ஆங்கிலேயர் காலத்தில்கூட இவ்வளவு அடக்குமுறை இருந்ததாக தெரியவில்லை.

இவ்வளவு இயக்கங்கள் போராடிக்கொண்டு இருக்கும்போது அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எமர்ஜென்சி காலத்தில்கூட கொஞ்சம் நியாயம் இருந்தது. இது அதைவிட கொடூரமாக இருக்கிறது. எனவே, முதல்-அமைச்சர், தலைமை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருடன் தமிழகத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசுவோம். அதற்கு சரியான பதில் இல்லை என்றால், ஒட்டுமொத்த தமிழகமும் சேர்ந்து போராடும் சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

வேல்முருகன் கூறும்போது, “100 நாட்களாக தூத்துக்குடி மக்கள் போராடியபோது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதா? வேண்டுமென்றே திட்டமிட்டு, போராடுகிற மக்களை அடக்க நினைக்கும் அரசின் இந்த அராஜக நடவடிக்கைக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் சூழ்நிலை விரைவில் வரும்” என்றார்.

Next Story