‘கால்டுவெல் இல்லை என்றால் திராவிடம் இல்லை’ கவிஞர் வைரமுத்து பேச்சு


‘கால்டுவெல் இல்லை என்றால் திராவிடம் இல்லை’ கவிஞர் வைரமுத்து பேச்சு
x
தினத்தந்தி 25 Aug 2018 9:30 PM GMT (Updated: 25 Aug 2018 7:06 PM GMT)

கால்டுவெல் இல்லை என்றால் திராவிடம் இல்லை என்று கால்டுவெல் ஆய்வுக்கட்டுரையை அரங்கேற்றும் விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார்.

சென்னை,

தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு கவிஞர் வைரமுத்து கட்டுரைகளை எழுதி அரங்கேற்றி வருகிறார். அந்தவகையில் 19-வது படைப்பாக ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ கண்ட கால்டுவெல் பற்றி ஆய்வுக்கட்டுரையை அவர் எழுதியுள்ளார். இதனை அரங்கேற்றம் செய்யும் விழா நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், திருநெல்வேலி பைந்தமிழ் மன்றத்தின் தலைவருமான வைகோ தலைமை தாங்கினார். பைந்தமிழ் மன்றத்தின் செயலாளர் செ.திவான் வரவேற்புரையாற்றினார். இதையடுத்து கால்டுவெல் நூலை வைகோ வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். பைந்தமிழ் மன்றத்தின் துணைத் தலைவரும், எழுத்தாளருமான மதுரா, தூய யோவான் கல்லூரி முதல்வர் செ.ஜான் கென்னடி, நெல்லை திருமண்டல திருச்சபை செயலாளர் டி.வேதநாயகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் தனது கட்டுரையை அரங்கேற்றி கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

தமிழாற்றுப்படையில் இன்று (நேற்று) கால்டுவெல் கட்டுரையை அரங்கேற்றுகிறேன். வைகோ இந்த விழாவுக்குத் தலைமை ஏற்றிருக்கிறார். கால் நூற்றாண்டுக்கு மேல் வைகோ மீது காதல் கொண்டவன் நான். தோல்விகளும், ஏமாற்றங்களும் சூழ்ந்து வந்தாலும் அவர் பயணத்தை நிறுத்தவே இல்லை. முள்காட்டில் பயணப்பட்டாலும் காற்று கிழிந்து போவதில்லை. இடைவெளி இல்லாத போராளி வைகோ. என்னிடம் இருக்கும் 200 எம்.பி.க்களும் சரி வைகோ ஒருவரும் சரி என்று இந்திரா காந்தியால் வியக்கப்பட்டவர். அவர் தலைமை இந்த விழாவுக்குப் பெருமை. அவரது சிம்மக்குரல் விரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பது எங்கள் நியாயமான விருப்பம்; நிறைவேறும் என்று நம்புகிறோம்.

கிறித்தவப் பெருமக்களால் தமிழரும், தமிழர்களும் அடைந்த பெருமைகள் ஆயிரம். தமிழுக்கு முதல் உரைநடை கொண்டு வந்தவர்கள் கிறித்தவப் பெருமக்கள். 1577-ல் ஏசு சபை பாதிரிமார்களால் கிறித்தவ வேதோபதேசம் என்ற உரைநடைநூல் வெளிவந்தது. 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொச்சியிலும் திருநெல்வேலி புன்னைக்காயலிலும் முதல் அச்சுப்பொறியைக் கொண்டுவந்தவர்கள் கிறித்தவப் பாதிரிமார்களே. தமிழின் முதல் அகராதியான சதுரகராதியை உருவாக்கியவர் வீரமாமுனிவர் என்ற கிறித்தவப் பாதிரிதான். திருக்குறள் என்ற செல்வத்தை ஐரோப்பாவிற்குப் பெரிதும் அறிமுகப்படுத்தியவர் ஜி.யு.போப் என்ற கிறித்தவப் பெருமகன்தான். தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரத்தை’ எழுதிய வேதநாயகம் பிள்ளையும் கிறிஸ்தவர்தான். இவர்கள் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும் திராவிட ஒப்பிலக்கணம் கண்டவர் கால்டுவெல்.

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்றும், திராவிடம் என்பது வெறும் சொல் அல்ல மறுக்கமுடியாத ஒரு மானுடக் கலாசாரம் என்றும் அறிவுலகத்துக்கு அறிவித்தவர் கால்டுவெல். கால்டுவெல் மட்டும் திராவிடம் என்ற இனக் குறியீட்டை கண்டறியாது இருந்திருந்தால் நமக்கு அடையாளமில்லை; ஆதாரமில்லை. கிரீடமில்லை; கீர்த்தியில்லை. வீழ்த்தப்பட்ட தமிழர்கள் இன்று அடைந்திருக்கும் வெற்றியும் இல்லை. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, மறைமலையடிகள், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய திராவிடச் சிங்கங்கள் இல்லை.

இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் பல்லவர் காலத்தில் ‘நமஸ்காரம்’ என்றார்கள். விஜயநகர ஆட்சியின்போது ‘தாசானு தாசன்’ என்று தெண்டனிட்டுக்கொண்டார்கள். நவாப்புகளின் ஆட்சியில் ‘சலாம் அலேகும்’ என்றார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் ‘குட் மார்னிங்’ என்றார்கள். விடுதலைப் போராட்ட இந்தியாவில் ‘வந்தே மாதரம்’ என்றார்கள். விடுதலைக்குப் பின் ‘ஜெய்ஹிந்த்’ என்றார்கள். திராவிட இயக்கம் வளர்ந்த பிறகுதான் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் ‘வணக்கம்’ என்று வாய் மணக்கச் சொன்னார்கள்.

கால்டுவெல் கண்டறிந்த திராவிடம் என்பது தமிழர்களின் சொல்லை மட்டுமல்ல இனத்தை, நிலத்தை, வரலாற்றை, கலாசாரத்தை மீட்டுக்கொடுத்தது. அயர்லாந்திலே பிறந்து இங்கிலாந்திலே வளர்ந்து தமிழ்நாட்டில் இறங்கி சென்னை முதல் இடையன்குடி வரை கால்நடையாகவே பயணப்பட்டு தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டு செய்து மறைந்து இடையன்குடி ஆலயத்தில் அடக்கமாகிக்கிடக்கும் கால்டுவெல் ‘திராவிட கொலம்பஸ்’ என்று கொண்டாடத்தக்கவர்.

அவர் தமிழ்நாட்டுக்கு வந்ததென்னவோ மதம் பரப்பத்தான். ஆனால் மொழி முதல்பட்சமாகவும் மதம் இரண்டாம் பட்சமாகவும் அவர் முன்னுரிமைகளை இடம்மாற்றிப் போட்டுவிட்டது காலம் தேன் குடிக்க வந்த வண்டு தேனுண்டு போகும்போது அயல் மகரந்தச் சேர்க்கை செய்து நந்தவனத்தைக் காடாக மாற்றிவிடுவதுபோல, மதம்பரப்ப வந்த மனிதர் திராவிடம் என்ற தத்துவத்துக்குத் தீப்பந்தம் கொளுத்திப் போய்விட்டார்.

கால்டுவெல்லின் பெருமையை இலக்கண உலகம் புரிந்துகொள்வதைவிட அரசியல் உலகம் புரிந்துகொள்வதைவிட இன்றைய இளைய உலகம் புரிந்துகொள்ளவேண்டும். கால்டுவெல்லை அறிந்துகொண்டால் உங்களுக்குப் பேரறிவின் பெருங்கதவு ஓசையோடு திறக்கும். கால்டுவெல்லின் தமிழ்த்தொண்டைக் காலம் வணங்குகிறது. பைன் மரங்களுக்கிடையே பிறந்து பனை மரங்களுக்கிடையே உறங்கும் மொழியறிஞனை நாங்களும் வணங்குகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பைந்தமிழ் மன்ற பொருளாளர் சி.ஏ.ஆர்.குட்டி என்ற சண்முகசிதம்பரம் நன்றி கூறினார். நெல்லை திருமண்டல தொடர்புத்துறை இயக்குனர் அ.கிப்ஸன் ஜான் தாசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதில், திரைப்பட ஒளிப்பதிவாளர் பெ.செல்லத்துரை, பைந்தமிழ் மன்றத்தின் புரவலர் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி, கல்வியாளர்கள், மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story