செங்கல்பட்டு-திருச்சி நெடுஞ்சாலையில் ரூ.25 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைச்சர் தகவல்


செங்கல்பட்டு-திருச்சி நெடுஞ்சாலையில் ரூ.25 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 4 Sep 2018 10:30 PM GMT (Updated: 4 Sep 2018 10:13 PM GMT)

அதிவேக பயணம், விதிமீறலை கண்காணிக்க செங்கல்பட்டு-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.25 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை,

சாலைகளில் விபத்து ஏற்படாமல் பணியாற்றிய பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு பரிசளிப்பு விழா சென்னை பல்லவன் சாலை பணிமனையில் நேற்று நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.

உயிரிழப்பு மற்றும் விபத்து ஏற்படுத்தாமல் பணியாற்றிய 80 டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் எரிபொருள் சிக்கனத்துடன் பஸ்களை இயக்கிய 9 டிரைவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். மேலும், தேர்வு செய்யப்பட்டுள்ள 8 பணிமனைகளை சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு அந்தந்த பணிமனைகளிலேயே பரிசும், பாராட்டு சான்றிதழும் மண்டல மேலாளர்களால் வழங்க அவர் உத்தரவிட்டார்.

விழாவில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், தமிழகத்தில் போக்குவரத்து மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் சாலைகளை நவீன தானியங்கி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் நடைமுறை உள்ளது. அதேபோல் ரூ.25 கோடியில் செங்கல்பட்டு-திருச்சி வரையிலான 280 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும். இதன்மூலம் அதிவேக பயணம், சாலை விதிமீறல் உள்ளிட்டவை களையப்பட்டு, பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும் என்றார்.

Next Story