சென்னையில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் மு.க.ஸ்டாலின் வீதி, வீதியாக பிரசாரம்


சென்னையில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் மு.க.ஸ்டாலின் வீதி, வீதியாக பிரசாரம்
x
தினத்தந்தி 7 April 2019 11:45 PM GMT (Updated: 7 April 2019 10:27 PM GMT)

மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் வீதி, வீதியாக சென்று தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர் நடந்து சென்று வாக்கு சேகரித்ததால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல்களில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசார பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

கடந்த மாதம் 24-ந் தேதி பெரம்பூரிலும், கடந்த 1-ந் தேதி கண்ணகி நகரிலும் நடந்த பிரசார பொதுக்கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிலையில் தான் எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டு வென்ற கொளத்தூர் தொகுதியில் நேற்று தனது பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். கொளத்தூர் 100 அடி சாலையில் இருந்து அவர் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட தென்பழனி நகர், ஜம்புலிங்கம் மெயின் ரோடு 20-வது தெரு சந்திப்பு, திரு.வி.க.நகர் பஸ்நிலையம், லட்சுமி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் மு.க.ஸ்டாலின் வாக்குகள் சேகரித்து பேசினார்.

பெரம்பூர் பி.வி.காலனி ரவுண்டானா, எம்.ஆர்.நகர் ஆகிய இடங்களில் டாக்டர் கலாநிதி வீராசாமி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் திறந்தவேனில் வீதி, வீதியாக சென்று ‘உதயசூரியன்’ சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

திரு.வி.க.நகர் பஸ் நிலையத்தில் பேசி முடித்த பிறகு, மு.க.ஸ்டாலின் வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார். அங்கிருந்து அருகில் உள்ள காமராஜர் நகர், கோபாலபுரம், அப்பாராவ் தோட்டம், லட்சுமி அம்மன் கோவில் பகுதிகளில் வீதி, வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

அவருடன் வடசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியும் சென்றார். திரு.வி.க.நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் உள்ள தண்ணீர் பந்தலில் தண்ணீர் குடித்தார்.

வீதி, வீதியாக வாக்கு சேகரிக்க வந்த மு.க.ஸ்டாலினை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வரவேற்றனர். ஒவ்வொருவரும் மு.க.ஸ்டாலினை அணுகி கைகுலுக்கி மகிழ்ச்சி அடைந்தனர். அனைவருக்கும் சளைக்காமல் கும்பிட்டபடியும், கைகுலுக்கியபடியும் சிரித்தபடியே மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சில மூதாட்டிகள் மு.க.ஸ்டாலின் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்கள். இளம்பெண்கள் ஆர்வத்துடன் மு.க.ஸ்டாலினுடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். சிறுவர்-சிறுமிகளும் ஆர்வத்துடன் வந்து மு.க.ஸ்டாலினுடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.

முன்னதாக தேர்தல் பிரசார களத்தில் பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நடைபெற இருப்பது நாடாளுமன்ற தேர்தல். உங்களுடைய வாக்கு என்பது வெறும் வாக்கு இல்லை. இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற போகிறது. உங்களுடைய தலையெழுத்தையும், உங்களுடைய வாழ்க்கையில் நிம்மதியை அளிக்க சூழ்நிலையை உருவாக்க போவது நீங்கள் அளிக்கும் வாக்கு தான். எனவே உங்களது வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மோடியும், எடப்பாடியும் நாட்டுக்கு தேவை இல்லாதவர்கள். மோடி இந்தியாவின் பிரதமர் இல்லை. வெளிநாடுவாழ் பிரதமர். ஏனென்றால் அவர் இந்தியாவிலேயே இருப்பது இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் தான் சுற்றி, சுற்றி வருகிறார். தேர்தல் முடிந்தவுடன் வெளிநாட்டுக்கு போய்விடுகிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களை பற்றியோ, நாட்டை பற்றியோ சிறிதும் சிந்தித்து பார்க்கவில்லை.

எனவே வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மத்தியில் உள்ள சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல். அதேபோல தமிழகத்தில் ஆளும் கட்சியை அப்புறப்படுத்தக்கூடிய சூழ்நிலையில் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வெற்றியை தேடித்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story