நீட் தேர்வில் மீண்டும் குளறுபடி: நெல்லை மையத்தில் இருந்து 600 பேர் மதுரைக்கு மாற்றம்


நீட் தேர்வில் மீண்டும் குளறுபடி: நெல்லை மையத்தில் இருந்து 600 பேர் மதுரைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 3 May 2019 1:40 PM GMT (Updated: 3 May 2019 1:40 PM GMT)

நாளை மறுநாள் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி தேர்வு மையத்தில் இருந்து 600 மாணவர்கள், மதுரையில் உள்ள மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்ற போது தமிழக மாணவர்களுக்கு  வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. குளறுபடிகளால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலையும் நேரிட்டது. இவ்வாண்டும் அதுபோன்ற ஒரு குளறுபடி கடைசி நேரத்தில் ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள் 5-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி மையத்தில் இருந்து 600 மாணவர்கள், மதுரையில் உள்ள மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 இதனால் மாணவர்களிடம் ஒருவித பதற்றம் உருவாகியுள்ளது. தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ள நிலையில், தேசிய சோதனை தேர்வு முகமை நேற்று திடீரென மதுரை நகரத்தில் உள்ள 5 மையங்களையும், நெல்லையில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு மையத்தையும் மாற்றி அமைத்துள்ளது. திருநெல்வேலி புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையம், மதுரை அழகர்கோவிலில் உள்ள  லட்சுமி நாராயணா வித்யாலயா பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய ஹால்-டிக்கெட்டை ntaneet.nic.in என்ற இணையதளத்தில் டவுன் - லோடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில், நான்கு மணி நேரம் பயணம் செய்து தேர்வு எழுதும் நிலைக்கு கடைசி நேரத்தில் மாணவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். தேர்வு மையம் மாற்றப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. 

Next Story