நல்லக்கண்ணு வசித்து வந்த அரசு குடியிருப்பில் இருந்து அவரை வெளியேற்றி இருப்பது கண்டனத்திற்குரியது -மு.க.ஸ்டாலின்


நல்லக்கண்ணு வசித்து வந்த அரசு குடியிருப்பில் இருந்து அவரை வெளியேற்றி இருப்பது கண்டனத்திற்குரியது -மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 May 2019 1:32 PM GMT (Updated: 11 May 2019 1:32 PM GMT)

சென்னை தியாகராயநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணுவை வெளியேற்றியது கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் 94 வயது மூத்த அரசியல்வாதியுமான நல்லக்கண்ணுவுக்கு அரசு சார்பில் வாடகைக்கு குடியிருக்க கடந்த 2007-ஆம் ஆண்டு இந்த குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த கட்டிடத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து வீட்டை காலி செய்ய நல்லக்கண்ணு உள்பட அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இதையடுத்து நல்லகண்ணு வீட்டை காலி செய்தார். வேறு வீட்டை ஒதுக்காமல் நல்லக்கண்ணுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை தியாகராயநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணுவை வெளியேற்றியது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

போராட்டமும் தியாகமுமே வாழ்க்கை முறையாகக் கொண்ட நல்லக்கண்ணு ஐயா அவர்கள், 12 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு குடியிருப்பில் இருந்து வெளியேற்றி இருப்பது கண்டனத்துக்குரியது. தோழர் நல்லக்கண்ணு ஐயா அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல் அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்! என பதிவிட்டுள்ளார்.


Next Story