பிற மாநிலங்களில் தமிழை 3வது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்; பிரதமருக்கு முதல் அமைச்சர் கோரிக்கை


பிற மாநிலங்களில் தமிழை 3வது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்; பிரதமருக்கு முதல் அமைச்சர் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Jun 2019 8:39 AM GMT (Updated: 5 Jun 2019 8:39 AM GMT)

பிற மாநிலங்களில் தமிழை 3வது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

புதிய தேசிய கல்வி கொள்கையை வரையறுப்பது குறித்து ஆராய டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்து இருந்தது. இந்த குழு தனது வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலிடம் கடந்த மே 31ந்தேதி சமர்ப்பித்தது. அதில், மும்மொழி கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரை, தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. மும்மொழி கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.  இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்தது.

இந்த நிலையில், திருத்தப்பட்ட வரைவு கல்விக்கொள்கை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக  இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் பயில வேண்டும் என்பது நீக்கப்பட்டது. விருப்பத்தின் அடிப்படையில் 3வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம்,  தமிழகத்தில் 3வது மொழியாக இந்தி மொழி பயில வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்து படிக்கலாம்.

இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், மற்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக சேர்க்க நடவடிக்கை தேவை என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதனால் உலகின் மிக தொன்மையான மொழிக்கு பெருமை சேர்ப்பதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story