வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது


வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
x
தினத்தந்தி 5 Aug 2019 1:31 AM GMT (Updated: 5 Aug 2019 1:46 AM GMT)

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

வேலூர்,

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.  பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 39 தொகுதிகளில், தேனி தொகுதியை தவிர மற்ற 37 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை நடைபெறும்.  வாக்கு எண்ணிக்கை 9ந்தேதி நடக்கிறது.

வேலூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 1,351 பேர் ஆண்கள், 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேர் பெண்கள், 105 பேர் மூன்றாம் பாலினத்தினர்.  இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளன.

வாக்காளர்கள் அனைவரும் பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களை காட்டி ஓட்டுப்போடலாம்.  இந்த நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  வாக்காளர்கள் காலையிலேயே வாக்கு சாவடிகளுக்கு ஆர்வமுடன் சென்று வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

Next Story