ஓ.பன்னீர்செல்வம் 8-ந் தேதி அமெரிக்கா செல்கிறார்; தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை திரட்டுகிறார்


ஓ.பன்னீர்செல்வம் 8-ந் தேதி அமெரிக்கா செல்கிறார்; தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை திரட்டுகிறார்
x
தினத்தந்தி 6 Nov 2019 11:17 PM GMT (Updated: 6 Nov 2019 11:17 PM GMT)

தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார். 8-ந் தேதி அமெரிக்கா புறப்படும் அவர், அங்கு தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை திரட்டுகிறார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 8-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டி.சி. மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறார்.

அங்கு, தமிழ்நாட்டுக்கான புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் பெறுவது குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவின் உயர் அலுவலர்களுடன் விவாதிக்கிறார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் திரட்டுவது குறித்து இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.

இதற்காக 8-ந் தேதி அதிகாலை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் சிகாகோ நகரம் சென்றடைகிறார். 9-ந் தேதி மாலை சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 10-ந் தேதி ‘குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார்ஸ்-2019’ விழாவில் கலந்துகொள்கிறார். அந்த விழாவில் ‘இண்டர்நேஷனல் ரைசிங் ஸ்டார் ஆப் தி இயர் - ஆசியா’ என்ற விருது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்படுகிறது.

12-ந் தேதி சிகாகோ நகர மேயர் மற்றும் இல்லினாய்ஸ் மாநில கவர்னர் மற்றும் இதர முக்கிய பிரமுகர்களை சந்திக்க துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு உள்ளார். மேலும் ‘குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார்ஸ்-2019’ விழா மற்றும் இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க வாழ் தொழில்முனைவோர் சார்பில் நடத்தப்படும் வட்ட மேசை கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்.

13-ந் தேதி, ஓ.பன்னீர்செல்வம் வாஷிங்டன் டி.சி. செல்கிறார். அங்கு அவருக்கு இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க பன்னாட்டு கூட்டமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

14-ந் தேதி ஹூஸ்டன் நகருக்கு சென்று தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அங்குள்ள முக்கிய தொழில் முனைவோர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடுகிறார்.

15-ந் தேதி ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான ‘எலெக்ட்ரானிக்ஸ் டோனர் போர்டை’ தொடங்கிவைக்கிறார். 16-ந் தேதி நியூயார்க் சென்று இந்திய-அமெரிக்க கலாசாரம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது நிதித்துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன் உடன் செல்கிறார். 17-ந் தேதி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் திரும்புகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story