அமமுக அதிருப்தியாளர்களுடன் அதிமுகவில் இணைகிறார் புகழேந்தி


அமமுக அதிருப்தியாளர்களுடன் அதிமுகவில் இணைகிறார் புகழேந்தி
x
தினத்தந்தி 10 Nov 2019 8:26 AM GMT (Updated: 10 Nov 2019 10:10 AM GMT)

அமமுக அதிருப்தியாளர்கள் புகழேந்தி தலைமையில் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளனர்.

சேலம்,

சேலத்தில் அமமுக அதிருப்தி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமமுகவின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்த புகழேந்தி கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

அப்போது செய்தியாளர்களிடம் டி.டி.வி. தினகரனை நம்பி சென்றவர்கள் இன்று அனைத்தையும் இழந்து நிற்பதாகவும் அமமுகவில் இருந்து பிரியும் போது நிச்சயம் தெரியப்படுத்துவோம் என்றும் கூறினார்.

அதனை தொடர்ந்து இன்று சேலத்தில் நடைபெற்ற அ.ம.மு.க. அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், 

“அமமுக என்னும் கம்பெனியை நம்பி இளைஞர்கள் இனி வீண் போக வேண்டாம்.

தன்னை நம்பி வந்தவர்களை டி.டி.வி.தினகரனால் காப்பாற்ற முடியவில்லை. அவர் மீதான நம்பிக்கையை முழுவதுமாக இழந்து விட்டோம்” என்றார்.

மேலும் டி.டி.வி.தினகரன் கட்சியை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய அவர், அமமுகவில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அதிமுகவில் இணையப் போவதாக அறிவித்தார்.

இதனையடுத்து புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story