1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் இன்று முதல் வழங்கப்படும்


1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் இன்று முதல் வழங்கப்படும்
x
தினத்தந்தி 8 Jan 2020 11:00 PM GMT (Updated: 8 Jan 2020 7:20 PM GMT)

1,000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது.

சென்னை, 

பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் போன்றவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு நவம்பர் 29-ந் தேதி தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், ‘பொங்கல் பரிசு தொகுப்பை இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந்தேதிக்குள் மக்களுக்கு வழங்கிடவும், விடுபட்டோருக்கு 13-ந்தேதி வழங்கியும் முழுமையாக பணியை முடித்திட வேண்டும்’, என்று உணவு பொருள் வழங்கல்-நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியானது.

அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது.

இன்று முதல் 12-ந்தேதி வரையிலான 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தெருக்கள் வாரியாக அந்தந்த ரேஷன் கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் 13-ந்தேதி பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க ரேஷன் கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட இருக்கிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) மூலமாகவே வழங்கப்பட இருக்கிறது. ஸ்மார்ட் கார்டு இல்லையென்றால், அக்குடும்ப அட்டையில் பெயர் உள்ள நபர் ஒருவரின் ஆதார் அட்டை அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ‘பாஸ்வேர்டு’ அடிப்படையிலும் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றதை உறுதிசெய்யும் வகையில் அந்தந்த ரேஷன் கடைகளில் ஒப்புதல் படிவத்தில் பொதுமக்களின் கையெழுத்து பெறப்படும்.

Next Story