ஹைட்ரோ கார்பன் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்ய தயாரா? - மத்திய அரசுக்கு வைகோ கேள்வி


ஹைட்ரோ கார்பன் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்ய தயாரா? - மத்திய அரசுக்கு வைகோ கேள்வி
x
தினத்தந்தி 13 Feb 2020 10:00 PM GMT (Updated: 13 Feb 2020 9:58 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறதா? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

மத்திய பா.ஜ.க. அரசு, 2014-ம் ஆண்டிலிருந்தே காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் சோழ மண்டலத்தைப் பாதுகாக்க காவிரிப் பாசன விவசாயிகளும், பொதுமக்களும் இடையறாது போராடி வருகின்றனர்.

மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மத்திய அரசு போட்டது. மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை 5 ஆயிரத்து 99 சதுர கி.மீ. பரப்பளவில், மொத்தம் 324 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மற்றும் வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் வேதாந்தா குழுமம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட மத்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் சார்பில், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதற்காகவே சுற்றுச் சூழல் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவந்து, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதி தேவை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், இந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பு தேவையில்லை என்று எதேச்சதிகாரமாக பா.ஜ.க. அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது.

இதுமட்டும் இல்லாமல், காவிரிப் படுகை பகுதியான கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு 2017-ம் ஆண்டு ஜூலை 19-ந்தேதி குறிப்பாணை வெளியிட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பது கானல் நீராகிப் போய்விடுமோ? என்ற கவலை எழுகிறது. ஏற்கனவே ‘நீட்’ தேர்வுக்கு விலக்குக் கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு என்ன கதி நேர்ந்தது? என்பது அனைவருக்கும் தெரியும்.

காவிரி தீரத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முழுமையாகச் செயல்படுத்த வேண்டுமானால், வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுடன் செய்திருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ரத்து செய்ய தயாரா? கடந்த 11-ந்தேதி மாநிலங்களவையில் ஹைட்ரோ கார்பன் பிரச்சினையை எழுப்ப முயன்றேன். ஆனால் அவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை.

காவிரிப் படுகை மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் திகழ வேண்டுமானால் வேதாந்தா, ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். காவிரிப் படுகையில் பெட்ரோலிய, ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த குறிப்பாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story