வீடுபுகுந்து 1¾ கிலோ நகை- ரூ.7 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வீடுபுகுந்து 1¾ கிலோ நகை- ரூ.7 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Jun 2020 10:00 PM GMT (Updated: 15 Jun 2020 7:04 PM GMT)

வீடு புகுந்து 1¾ கிலோ நகைகள் மற்றும் ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அத்திக்கடை தெற்கு தெருவை சேர்ந்தவர் ரசூல் பீவி. இவர் தனது வீட்டில் மகன் சர்புதீன், அவருடைய மனைவி ரீமா மற்றும் குழந்தைகள், மகள் ரம்ஜான்பேகம், அவரது கணவர் யூசூப்தீன் மற்றும் குழந்தைகள், மற்றொரு மகன் நூருல் அமீனின் மனைவி சுல்தானா பேகம் உள்ளிட்டோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

இவர்களில் மகன் சர்புதீன், மருமகன் யூசூப்தீன் ஆகியோர் குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2 பேரும் அத்திக்கடை வந்தனர். மற்றொரு மகன் நூருல் அமீன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ரசூல் பீவியின் வீட்டில் உள்ள பீரோவில் அவரது மகன்கள் மற்றும் இரு மகள்கள் ஆகியோரின் குடும்ப நகைகள் 1¾ கிலோ நகைகள் வைக்கப்பட்டு இருந்தன.

பூட்டு உடைப்பு

குடும்பத்தினர் அனைவரும் வெளியூர் சென்றதால் அவர்களது வீடு பூட்டிக்கிடந்தது. நேற்று முன்தினம் மதியம் குடும்பத்தினர் அனைவரும் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முகப்பில் உள்ள கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதேபோல வீட்டு வாசலில் உள்ள மரக்கதவும் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

வீட்டில் இருந்த 2 இரும்பு பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்தன. அந்த பீரோக்களில் வைக்கப்பட்டு இருந்த 1¾ கிலோ நகைகள் மற்றும் ரூ.7 லட்சத்தை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக ரசூல்பீவியின் மருமகன் யூசூப்தீன் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன நகைகள் மற்றும் பணம் ஆகியற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story