தலைமை செயலகத்தில் சோகம் முதல்-அமைச்சரின் தனி செயலாளர் கொரோனாவால் மரணம்


தலைமை செயலகத்தில் சோகம் முதல்-அமைச்சரின் தனி செயலாளர் கொரோனாவால் மரணம்
x
தினத்தந்தி 18 Jun 2020 12:00 AM GMT (Updated: 17 Jun 2020 8:57 PM GMT)

சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் அலுவலகப் பிரிவில் முதுநிலை தனிச் செயலாளராக பணியாற்றி வந்த பி.ஜே. தாமோதரன் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

சென்னை தாதண்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் பி.ஜே.தாமோதரன்(வயது 55). இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் அலுவலகப் பிரிவில் முதுநிலை தனி செயலாளராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமோதரனுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் தாமோதரனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். தாமோதரனின் மறைவு, தலைமை செயலக ஊழியர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைமை செயலகத்தில் கொரோனாவுக்கு பலியாகும் முதல் நபர் அவர்தான்.

தாமதமாக அனுமதி

இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் டாக்டர் நாராயணசாமி கூறியதாவது:-

தாமோதரன் கடந்த 7 நாட்களுக்கு முன்னாள் உடல்நிலை சரி இல்லாமல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று மிக தீவிரமாக இருந்தது. அவர் தாமதமாக அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் தாமோதரன் குடும்பத்தினரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

முதல்-அமைச்சர் ஆறுதல்

பி.ஜே.தாமோதரன் சென்னை தாதண்டன் நகரில் உள்ள அரசு குடியிருப்பில் மனைவி மற்றும் ஒரு மகன், மகளுடன் வசித்து வந்தார். மகன் பி.இ. பட்டம் படித்துள்ளார். மகள் சி.ஏ. படிப்பில் சேர்ந்திருக்கிறார்.

தாமோதரனின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மகனிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

முதல்-அமைச்சர் இரங்கல்

தாமோதரனின் மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தலைமை செயலகம், பொதுத்துறை, முதல்-அமைச்சர் அலுவலகப் பிரிவில் முதுநிலை தனிச் செயலராகப் பணியாற்றி வந்த பி.ஜே.தாமோதரன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

கொரோனா தடுப்புப் பணியின்போது, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தாமோதரனின் சேவை மகத்தானது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு வேலை

தாமோதரனின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story