தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,943 பேருக்கு தொற்று


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,943 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 30 Jun 2020 11:00 PM GMT (Updated: 30 Jun 2020 10:47 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியது. புதிதாக 3,943 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 60 பேர் நேற்று உயிரிழந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் ஒரே நாளில் 30 ஆயிரத்து 53 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 943 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 11 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 76 பேரும் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட 212 குழந்தைகளும், 60 வயதுக்கு உட்பட்ட 492 முதியவர்களும் அடங்குவர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 44 பேர், தனியார் மருத்துவமனையில் 16 பேர் என 60 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் சென்னையில் 42 பேர், செங்கல்பட்டில் 5 பேர், திருவள்ளூர், மதுரையில் தலா 3 பேர், ராமநாதபுரத்தில் 2 பேர், காஞ்சீபுரம், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கரூரை சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா சாவு எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு பலனாக நேற்று 2 ஆயிரத்து 325 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 50 ஆயிரத்து 74 பேர் குணமடைந்து உள்ளனர். 38 ஆயிரத்து 889 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

தமிழத்தில் நேற்று 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி இந்த பட்டியலில் சென்னையில் 2 ஆயிரத்து 393 பேரும், மதுரையில் 257 பேரும், செங்கல்பட்டில் 160 பேரும், திருவள்ளூரில் 153 பேரும், காஞ்சீபுரத்தில் 90 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

சென்னையில் 888 பேரும், செங்கல்பட்டில் 92 பேரும், திருவள்ளூரில் 69 பேரும், காஞ்சீபுரத்தில் 21 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 11 லட்சத்து 70 ஆயிரத்து 683 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 10 லட்சத்து 80 ஆயிரத்து 516 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story