தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 1 July 2020 11:30 PM GMT (Updated: 1 July 2020 9:33 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது. புதிதாக 3,882 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 63 பேர் உயிரிழந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 ஆயிரத்து 852 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் 52 ஆயிரத்து 926 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் 37 பேரும், தனியார் மருத்துவமனையில் 26 பேர் என மொத்தம் 63 பேர் நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனா உயிரிழப்பு 1,264 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் சென்னையில் 41 பேரும், மதுரையில் 7 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், காஞ்சீபுரம், ராமநாதபுரம், செங்கல்பட்டில் தலா 2 பேரும், தேனி, புதுக்கோட்டை, விருதுநகர் கரூரில் தலா ஒருவரும் அடங்குவர்.

31 ஆயிரத்து 521 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் 3,807 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 16 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த 59 பேர் என 3 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 12 லட்சத்து 2 ஆயிரத்து 204 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு 39 ஆயிரத்து 856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று சென்னையில் 2 ஆயிரத்து 182 பேரும், மதுரையில் 297 பேரும், செங்கல்பட்டில் 226 பேரும், சேலத்தில் 178 பேரும், திருவள்ளூரில் 147 பேரும், ராமநாதபுரத்தில் 111 பேரும், காஞ்சீபுரத்தில் 86 பேரும், வேலூரில் 77 பேரும், விருதுநகரில் 45 பேரும், திருவண்ணாமலையில் 42 பேரும், திண்டுக்கலில் 35 பேரும், கன்னியாகுமரி, தேனி, நெல்லையில் தலா 33 பேரும், திருச்சியில் 31 பேரும், சிவகங்கை, புதுக்கோட்டையில் தலா 30 பேரும், கள்ளக்குறிச்சியில் 28 பேரும், விழுப்புரத்தில் 27 பேரும், கோவையில் 23 பேரும், தென்காசியில் 21 பேரும், ஈரோட்டில் 19 பேரும், நீலகிரியில் 18 பேரும், திருப்பத்தூரில் 17 பேரும், தூத்துக்குடியில் 15 பேரும், திருவாரூரில் 13 பேரும், திருப்பூரில் 10 பேரும், நாகப்பட்டினத்தில் 9 பேரும், ராணிப்பேட்டை, கடலூரில் தலா 8 பேரும், தஞ்சாவூரில் 7 பேரும், கிருஷ்ணகிரியில் 6 பேரும், தர்மபுரியில் 5 பேரும், கரூரில் 4 பேரும், நாமக்கலில் 3 பேரும், அரியலூரில் ஒருவரும் என 36 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. பெரம்பலூரில் மட்டும் புதிய பாதிப்பு இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story