சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: இன்று விசாரணையை தொடங்குகிறது சிபிஐ


சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: இன்று விசாரணையை தொடங்குகிறது சிபிஐ
x

இந்தியாவை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ இன்று இன்று விசாரணையை தொடங்குகிறது

தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.இந்த வழக்கை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 பேரை கைது செய்தனர். ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரை செய்தது. அதன்பேரில் புதுடெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 7-ந் தேதி மாலையில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் பதிவு செய்த 176(1-ஏ)(1) பிரிவில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

மேலும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் கடந்த 19.6.2020 முதல் 22.6.2020 வரையிலான காலகட்டத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், கொலை செய்தல், தடயங்களை அழித்தல் போன்ற சந்தேகப்படும்படியான குற்றங்கள் நடந்து இருக்கலாம் என்றும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து உள்ளனர்.

தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக புதுடெல்லி சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜய்குமார் சுக்லா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் தலைமையிலான குழுவினர் புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து உள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வருகின்றனர். அங்கு இந்த வழக்கு விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், வழக்கு ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளார். அதன்பிறகு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர்.


Next Story