எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி


எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி
x
தினத்தந்தி 10 July 2020 10:35 PM GMT (Updated: 10 July 2020 10:35 PM GMT)

எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

சென்னை, 

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 8-ந் தேதி மின்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கும், அவரது மகன் தரணிதரனுக்கும் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

அமைச்சர் பி.தங்கமணி 7-ந் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அதற்கு முந்தைய நாள் (6-ந்தேதி) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். எனவே, அமைச்சர் பி.தங்கமணியை சந்தித்தவர்கள் எல்லாம் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர்.

அந்த வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவரது அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்தநிலையில், பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. அதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

Next Story