தமிழகத்தில் இன்று தளர்வில்லா ஊரடங்கு; வாகன சோதனைகள் தீவிரம்


தமிழகத்தில் இன்று தளர்வில்லா ஊரடங்கு; வாகன சோதனைகள் தீவிரம்
x
தினத்தந்தி 26 July 2020 2:54 PM IST (Updated: 26 July 2020 2:54 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் இன்று தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

சென்னை,

தலைநகர் சென்னையில் ஆறாவது ஞாயிற்றுக் கிழமையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை , ஜிஎஸ்டி சாலை , மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்களை கண்காணிக்க, 288 இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரவை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு, அவர்களிடம் இருந்து போலீசார், அபராதம் வசூலிக்கின்றனர்.

மதுரையில், இன்று தளர்வில்லா ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றிய 48ஆயிரம் நபர்களிடம் இருந்து 70 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது. தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நெல்லை மாநகரில் 4-வது ஞாயிற்றுக்கிழமையாக தளர்வில்லா ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இல்லாததால், முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காட்சி அளித்தது. நெல்லையில் கொரோனா பாதித்த 3 ஆயிரத்து 595 பேரில் 2 ஆயிரத்து 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 458 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 
1 More update

Next Story