திமுகவில் இருந்து தன்னை நீக்கினாலும் கவலை இல்லை - திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம்


திமுகவில் இருந்து தன்னை நீக்கினாலும் கவலை இல்லை - திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம்
x
தினத்தந்தி 5 Aug 2020 11:12 AM GMT (Updated: 5 Aug 2020 11:12 AM GMT)

திமுகவில் இருந்து தன்னை நீக்கினாலும் கவலை இல்லை என்று திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுகவின் தலைமை நிலைய அலுவலகச் செயலாளரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான கு.க.செல்வம் நேற்று முன்தினம் இரவு தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன் டெல்லிக்கு சென்று, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, கு.க.செல்வத்தை திமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.  

இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் இன்று சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “மோடி, ஜே.பி.நட்டா மற்றும் முருகன் ஆகியோருக்கு நன்றி. நான் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர்களிடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு மின் தூக்கி கேட்டேன்.  திமுக உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். கடவுள் முருகனை பற்றி தவறாக பேசியவர்களை திமுக தலைவர் கண்டிக்க வேண்டும். கட்சியை விட்டு நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை. தமிழகத்தில் வாரிசு அரசியல் மாறி குடும்ப அரசியல் நடக்கிறது” என்றார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விபி துரைசாமி, “ கு.க செல்வம் பாஜகவில் இணைய வில்லை. இந்தியாவில் பாஜக எப்படி காங்கிரஸ் குடும்ப கட்சியை எதிர்க்கிறதோ, அதேபோன்று தமிழகத்தில் திமுக குடும்ப கட்சியை தமிழக பாஜக எதிர்க்கும். திமுக அதிருப்தியாளர்கள் பாஜக வரவேண்டும்” என்றார்.

Next Story