கேரளா மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


கேரளா மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2020 11:45 PM GMT (Updated: 19 Aug 2020 11:34 PM GMT)

கேரளா மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை,

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 6-ந் தேதி யன்று ராஜமலா பெட்டிமுடி டிவிசன், நயமக்காடு தேயிலை தோட்டப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் குடியிருப்புகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பலர் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு, நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேரள முதல்-மந்திரியை நான் 7-ந் தேதியன்று தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டேன்.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டு பல ஆண்டுகளாக அங்கே தங்கி பணிபுரிந்து வருகிறவர்கள் என்ற தகவல் கிடைக்கப்பெற்றவுடன், உடனடியாக தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு, நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்த முழுத் தகவல்களை பெறும்படியும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டேன்.

எனது உத்தரவின் பேரில், தேனி மாவட்டத்தில் இருந்து, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஒரு குழு 7-ந் தேதியன்றே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து, தேசிய மீட்புப் பணி குழுவினருடன் இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் தமிழ்நாட்டில் உள்ள உயிரிழந்தவர்கள் குடும்பத்தின் நேரடி வாரிசுதாரர்களுக்கு இறந்த நபர் ஒருவருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கொரோனா நோயினால் உயிரிழந்த தொலைக்காட்சி நிருபர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

Next Story