தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை விவசாயத்துக்கும் நீட்டிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை விவசாயத்துக்கும் நீட்டிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Aug 2020 6:30 PM GMT (Updated: 2020-08-22T00:00:06+05:30)

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை விவசாயத்துக்கும் நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டம் ஊரகப் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருவதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில் வேளாண் தொழிலுக்கு அத்திட்டம் பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதையும் மறுக்க முடியாது. ஊரகப் பொருளாதார மறுமலர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், வேளாண் தொழிலை பாதுகாப்பதற்கும் ஒரேதீர்வு ஊரக வேலை உறுதித்திட்டத்தை விவசாயத்திற்கும் நீட்டிப்பதுதான்.

ஏற்கனவே, பட்டியலினம் மற்றும் பழங்குடியினர், நிலச்சீர்திருத்த பயனாளிகள், நாடோடிகள், சீர்மரபினர், வன உரிமை சட்டத்தின் பயனாளிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு சொந்தமான நிலங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேளாண் பணிகளுக்கு பணியாளர்கள் வழங்கப்படுகின்றனர். இதை அனைத்து சிறு, குறு உழவர்களின் நிலங்களுக்கும் நீட்டிக்கவேண்டும்.

தேசிய ஊரகவேலை உறுதித்திட்டத்தை விவசாயத்திற்கு நீட்டிப்பதால் மத்திய அரசுக்கு பொருளாதார சுமை எதுவும் ஏற்படாது. அதே நேரத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் பயன்கள் கிடைக்கும்; விவசாயமும் செழிக்கும். எனவே, உழவர்களின் நலன்கருதி இனியும் தாமதிக்காமல் மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுடன் கலந்தாய்வு நடத்தி, விதிகளை உருவாக்கி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை விவசாயத்திற்கு நீட்டிக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story