எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை


எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை
x
தினத்தந்தி 22 Aug 2020 12:59 PM GMT (Updated: 22 Aug 2020 1:21 PM GMT)

எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

 பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 5-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா தொற்று உள்ளது என்றும், இரு தினங்களில் குணமடைந்து வீடு திரும்பி விடுவேன் என்றும் அவரே வீடியோவில் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

ஆனால் கடந்த 13-ந் தேதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவ குழுவின் ஆலோசனையின்படி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகள்  பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ கருவி மூலமாகவும் அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையை மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை குறித்து தினமும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மாலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து  மருத்துவர்களுடன் ஆலோசித்து எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் கொரோனா பாதித்து எக்மோ உதவியுடன் சிகிச்சை பெறுபவர்கள் அதிகம் என்பதால் அங்குள்ள மருத்துவர்கள் ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

Next Story