தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு 100-ஐ தாண்டியது


தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு 100-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 1 Sep 2020 11:36 PM GMT (Updated: 1 Sep 2020 11:36 PM GMT)

தமிழகத்தின் 23 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு 100-ஐ தாண்டியது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 73 ஆயிரத்து 155 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,853 ஆண்கள், 2,075 பெண்கள் என மொத்தம் 5,928 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 30 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 201 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 835 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,084 பேரும், கோவையில் 581 பேரும், செங்கல்பட்டில் 384 பேரும் குறைந்தபட்சமாக கரூர், பெரம்பலூரில் தலா 33 பேரும், தர்மபுரியில் 10 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 47 லட்சத்து 26 ஆயிரத்து 22 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 969 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 223 ஆண்களும், 1 லட்சத்து 71 ஆயிரத்து 717 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 19 ஆயிரத்து 949 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 56 ஆயிரத்து 454 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 61 பேரும், தனியார் மருத்துவமனையில் 35 பேரும் என 96 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 22 பேரும், சேலத்தில் 10 பேரும், செங்கல்பட்டில் 9 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, வேலூரில் தலா 4 பேரும், திருவண்ணாமலை, தேனி, கள்ளக்குறிச்சியில் தலா 3 பேரும், கோவை, கடலூர், திண்டுக்கல், காஞ்சீபுரம், கன்னியாகுமரி, திருவாரூர், நெல்லையில் தலா இருவரும், விருதுநகர், விழுப்புரம், திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், மதுரை, கரூர், ஈரோட்டில் தலா ஒருவரும் என 29 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 7 ஆயிரத்து 418 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 23 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 31 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,194 பேரும், திருவள்ளூரில் 517 பேரும், கோவையில் 392 பேரும் அடங்குவர். இதுவரையில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 172 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 52 ஆயிரத்து 379 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 919 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 843 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 117 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் 2 தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 63 அரசு மற்றும் 89 தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 152 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story