பெருங்குடியில் ரூ.74.69 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தின் 2-வது தரவு மையம்: காணொலி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


பெருங்குடியில் ரூ.74.69 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தின் 2-வது தரவு மையம்: காணொலி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 8 Sep 2020 10:14 PM GMT (Updated: 8 Sep 2020 10:14 PM GMT)

சென்னை பெருங்குடியில் ரூ.74.69 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தமிழகத்தின் 2-வது அதிநவீன மாநில தரவு மையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

சென்னை, 

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின்கீழ், ‘அரசுத் துறைகளில் அதிகரித்து வரும் தகவல் உட்கட்டமைப்பு தேவைகளை கருத்தில் கொண்டு தமிழகத்தின் இரண்டாவது மாநில தரவு மையம் அமைக்கப்படும்’ என்று அறிவித்தார். அதன்படி, சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவன வளாகத்தில் ரூ.74 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் 2-வது அதிநவீன மாநில தரவு மையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

195 அடுக்குகளை கொண்ட இப்புதிய மாநில தரவு மையம், தமிழ்நாடு அரசின் மென்பொருள் பயன்பாடுகள் மற்றும் இதர சேவைகளை பாதுகாப்பான முறையில் தரவேற்றம் செய்து பயன்படுத்திட உதவும். மேலும் ஜி2ஜி (அரசுத் துறைகளுக்கிடையில்), ஜி2சி (அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையில்) மற்றும் ஜி2பி (அரசுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் இடையில்) இணையதள சேவைகளை வழங்குவதற்கும், வளர்ந்து வரும் அரசு துறைகளின் தகவல் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்திடவும் இந்த அதிநவீன மாநில தரவு மையம் நிறுவப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 1-ந் தேதி சட்டசபையில் 110 விதியின்கீழ் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் மின் ஆளுமை சேவைகளை இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளிலிருந்து கண்காணித்து, தடங்கலற்ற மற்றும் பாதுகாப்பான இணைய சேவையினை வழங்கும் வகையில் ‘தமிழ்நாட்டிற்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பு திட்டம்’ ரூ.21 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் எல்காட் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாட்டின் இணைய பாதுகாப்பு கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்தும் விதமாக முதற்கட்டமாக, அட்வான்ஸ்டு கம்ப்யூடிங் வளர்ச்சி மையம் (CDAC) மூலம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ள CERTTN -ன் என்ற இணையதளத்தை ( https://cert.tngov.in ) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். இதன்மூலம், CERTTN என்பது தமிழ்நாடு அரசின் கணினி அவசர கால பதிலளிப்பு குழுவாக இருக்கும். அனைத்து அரசு துறைகளின் கணினி கட்டமைப்புகளை தணிக்கை செய்தல், பாதுகாத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகளில் இது முக்கிய பங்கு வகிக்கும். தடையற்ற இணையவழி சேவைகள் மற்றும் அரசு துறைகளின் தரவுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

அதனைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1,837 பாடல்களின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

பின்னர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதியின் மகன் சி.பா.மூவேந்தன் எழுதிய ‘மக்களால் நான்’ எனும் புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.விஜயகுமார், டி-டேக் இயக்குனர் கமாண்டர் பிரகாஷ், தமிழ் வளர்ச்சி-செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் கோ.விசயராகவன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story