அங்கீகாரம் இல்லாத 71 கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லை -ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு


அங்கீகாரம் இல்லாத 71 கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லை -ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Sep 2020 10:23 PM GMT (Updated: 12 Sep 2020 10:23 PM GMT)

அங்கீகாரம் இல்லாத 71 கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லை என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை, 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில், தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தில் (என்.சி.டி.இ.) உரிய அங்கீகாரம் இல்லாத மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தினால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள கல்வியியல் கல்லூரிகளிலும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணைவு பெறாத கல்வியியல் கல்லூரிகளிலும், தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் மற்றும் பல்கலைக்கழக விதிப்படி மாணவர் சேர்க்கை செய்ய அனுமதி இல்லை.

அந்த வகையில் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 58 கல்லூரிகளும், 2020-2021-ம் கல்வியாண்டுக்கு தொடர் இணைவுக்கு விண்ணப்பிக்காத 13 கல்லூரிகளும் என மொத்தம் 71 கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

எனவே அக்கல்லூரிகள் 2020-2021-ம் கல்வியாண்டுக்கு பி.எட்., எம்.எட்., பி.ஏ. பி.எட்., பி.எஸ்.சி. பி.எட். பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு விதிகளை மீறி இந்த கல்லூரி படிப்புகளில் சேர்க்கை செய்யப்படும் மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என தெரிவித்தலாகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story