‘நான் ஒரு விவசாயி’ என இனியொரு முறை முதலமைச்சர் பழனிசாமி சொல்ல வேண்டாம் - மு.க.ஸ்டாலின்


‘நான் ஒரு விவசாயி’ என இனியொரு முறை முதலமைச்சர் பழனிசாமி சொல்ல வேண்டாம் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 18 Sep 2020 9:07 AM GMT (Updated: 18 Sep 2020 9:07 AM GMT)

‘நான் ஒரு விவசாயி’ என இனியொரு முறை முதலமைச்சர் பழனிசாமி சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய அரசு அறிவித்த விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளத்தின் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார். இந்நிலையில் அதிமுக அரசு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;-

“மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்ட மசோதாக்களும் தமிழக விவசாயிகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் வாழ்வுக்கும் எதிரான சட்டங்களாகும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் மத்திய பாஜக அரசின் விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு, மக்களவையில், அந்த சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் எதிரானவை என அறிந்தே, அதிமுக மகிழ்ச்சியுடன் ஆதரவளித்துள்ளதற்கு, திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் வர்த்தகம் செய்யும் விவசாயி, நிச்சயம் பான் எண் பெற்றிருக்க வேண்டும் என்பது, வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள விவசாயத்தை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வரும் சதி ஆகும். மாநிலப் பட்டியலில் வேளாண்மை இருந்தும் மத்திய பாஜக அரசு, விவசாயிகளுக்கு எதிரான இந்தச் சட்டங்கள் குறித்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, மத்திய பாஜக அரசின் இந்த விவசாயிகள் விரோதச் சட்டங்களுக்கு ஆதரவளித்து, விவசாயிகளின் நலன் குறித்து, கொஞ்சம் கூட இரக்கமின்றி நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் பழனிசாமியிடம் நான் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன். இனியொரு முறை மேடைகளில் நின்று 'நான் ஒரு விவசாயி' என்று மட்டும் சொல்லாதீர்கள்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story