இதுவரை 77,104 முதியவர்கள் பாதிப்பு; தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,500-ஐ தாண்டியது


இதுவரை 77,104 முதியவர்கள் பாதிப்பு; தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,500-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 30 Sep 2020 11:18 PM GMT (Updated: 30 Sep 2020 11:18 PM GMT)

தமிழகத்தில் இதுவரை 77,104 முதியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனா உயிரிழப்பு 9,500-ஐ தாண்டி உள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய(புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 85 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,476 ஆண்கள், 2,183 பெண்கள் என மொத்தம் 5,659 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 13 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 126 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 780 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,295 பேரும், கோவையில் 574, சேலத்தில் 378 பேரும், செங்கல்பட்டில் 335 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 12 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 71 லட்சத்து 35 ஆயிரத்து 878 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 5 லட்சத்து 97 ஆயிரத்து 602 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 729 ஆண்களும், 2 லட்சத்து 36 ஆயிரத்து 842 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 31 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 23 ஆயிரத்து 770 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 77 ஆயிரத்து 104 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 46 பேரும், தனியார் மருத்துவமனையில் 21 பேரும் என 67 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 16 பேரும், கோவையில் 11 பேரும், திருப்பூரில் 6 பேரும், சேலத்தில் 5 பேரும், கடலூர், தஞ்சாவூர், வேலூரில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் தலா 3 பேரும், தர்மபுரியில் 2 பேரும், ஈரோடு, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாகை, நாமக்கல், திருப்பத்தூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 19 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 9,520 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 610 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,205 பேரும், கோவையில் 697 பேரும், சேலத்தில் 350 பேரும், செங்கல்பட்டில் 373 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 819 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 46 ஆயிரத்து 263 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 950 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 290 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story