ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது- மு.க ஸ்டாலின்


ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது- மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 Oct 2020 9:58 AM GMT (Updated: 11 Oct 2020 11:55 AM GMT)

தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி ஊராட்சிக் கூட்டத்தில் தரையில் அமரவைக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''ஜனநாயக நெறிகளையொட்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஊராட்சி மன்றத் தலைவர், தரையில் அமர்ந்திருக்கும் அந்தப் படம், பொதுவாழ்வில் இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள தலைகுனிவு. சமத்துவத்திற்கும் - ஜனநாயகத்திற்கும் எதிரான இதுபோன்ற இழிசெயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை.

பட்டியலின மக்கள் உரிய அதிகாரம் பெற்று, சமுதாயத்தின் அங்கீகாரத்தை நிரந்தரமாகப் பெற வேண்டும். மற்ற அனைவர்க்கும் இணையாக முன்னேற்றம் அடைந்திட வேண்டும். நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு இதுமாதிரியான அவமரியாதைகள் நடக்கக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தேன்.

பட்டியலினத்தவரும், பழங்குடியினத்தவரும் அதிகாரத்தில் பங்கேற்று மக்கள் பணி ஆற்றிட வேண்டும், மாநிலத்தின் முன்னேற்றத்தில் நாட்டின் வளர்ச்சியில் முனைப்புடனும் உரிமையுடனும் ஈடுபட வேண்டும் என்பதில் திமுக உறுதியுடன் இருக்கிறது. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவருக்கு தெற்குத்திட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வு, சமூகநீதி போற்றும் தமிழ் மண்ணுக்கு நேர்ந்திருக்கும் அவமானம். ஆகவே இனி எந்த ஊராட்சியிலும் இதுபோன்ற அவமரியாதை நடக்கக்கூடாது; அ.தி.மு.க. அரசு அதனை அணுவளவும் அனுமதிக்கவும் கூடாது என்று வலியுறுத்துகிறேன்'' என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story