நடிகை குஷ்பு மீது மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார்


நடிகை குஷ்பு மீது மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார்
x
தினத்தந்தி 15 Oct 2020 8:27 AM GMT (Updated: 15 Oct 2020 8:27 AM GMT)

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகை குஷ்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் தான் 6 ஆண்டுகள் இருந்ததாகவும், தனக்கு அங்கு மரியாதை தரப்படவில்லை என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சியில்லாத கட்சி என்று அவர் விமர்சனம் செய்தார். அவரது கருத்துக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான மதுரை மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகை குஷ்பு மீது மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல் திண்டுக்கல் மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் நடிகை குஷ்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நடிகை குஷ்பு தான் தெரிவித்த கருத்து குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story