விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: 20 மாவட்டங்களில் 101 பேர் அதிரடி கைது


விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: 20 மாவட்டங்களில் 101 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 16 Oct 2020 9:30 PM GMT (Updated: 16 Oct 2020 9:09 PM GMT)

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் 101 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

சென்னை, 

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் 101 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.105 கோடி அளவுக்கு பணம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக கண்டறியப்பட்டது. குறிப்பாக கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்த முறைகேடு அதிக அளவில் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை கைது செய்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறைக்கு அனுப்பி வருகிறார்கள். இதுவரை நடந்த விசாரணையில் 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 69 பேர் இடைத்தரகர்கள். மீதி உள்ள 32 பேரில் 25 பேர் அரசு ஒப்பந்த பணியாளர்கள் ஆவார்கள். 7 பேர் மட்டும் நிரந்தர அரசு பணியில் இருந்தவர்கள்.

முறைகேடாக விவசாயிகள் பெயரில் நிதி உதவி பெற்றவர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.105 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது முறைகேடாக பெற்ற நிதி உதவி தொகை என்று தெரிய வந்துள்ளது. மேற்கண்ட தகவல்கள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Next Story