மதுரை முருகநேரி அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் உயிரிழப்பு


மதுரை முருகநேரி அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 23 Oct 2020 9:48 AM GMT (Updated: 23 Oct 2020 9:48 AM GMT)

மதுரை முருகநேரி அருகே தாலிகுளத்துப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

மதுரை,

மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள முருகநேரி பகுதியில் உள்ள தாலிகுளத்துப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கம் போல் இன்று 100க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர். இந்நிலையில் ஊழியர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது.

விபத்து ஏற்பட்ட உடன் பட்டாசு தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். இதற்கிடையில் ஒரு பட்டாசு அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியாகி இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து விருதுநகரில் இருந்தும் திருவில்லிபுத்தூரில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தற்போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்பு தான் உயிரிழந்திருப்பவர்களின் பெயர், விபரம் என்பது தெரியவரும் என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story