மனுஸ்மிருதி நூலை தடை செய்யக் கோரி திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்


மனுஸ்மிருதி நூலை தடை செய்யக் கோரி திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2020 11:09 AM GMT (Updated: 24 Oct 2020 11:09 AM GMT)

மனுஸ்மிருதி நூலை தடை செய்யக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் பேசிய நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதாக பாஜக கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த திருமாவளவன், தான் பேசியது திரித்து கூறப்பட்டிருப்பதாகவும், மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளதையே தான் குறிப்பிட்டு பேசியதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிற்படுத்தப்பட்ட மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்துவதும் மனுஸ்மிருதி நூலைத்  தடை செய்ய வேண்டும் என மைய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்சார்பில் சனிக்கிழமை (இன்று) மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மனுஸ்மிருதி நூலை தடை செய்யக் கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மதுரையிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தற்போது கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story