காயல்பட்டினத்தில் ரூ.75 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் - கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்


காயல்பட்டினத்தில் ரூ.75 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் - கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
x

காயல்பட்டினத்தில் ரூ.75 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை, கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

ஆறுமுகநேரி, 

காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையார் பள்ளிவாசல் அருகே ரூ.75 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்ட கனிமொழி எம்.பி. 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்தார். தற்போது பணிகள் முடிந்து திறப்பு விழா நேற்று காலை சுமார் 10 மணியளவில் கோமான் தெரு பள்ளிவாசல் அருகே நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பள்ளிவாசல் ஜமாத் தலைவர் கோஸ் முகமது, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் துணை தலைவர் துரை ஹாஜியார், காயல்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு செயலாளர் முத்துகிருஷ்ணன் என்ற கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயல்பட்டினம் நகர தி.மு.க. செயலாளர் முத்து முகமது வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன், சாகுல் அமீது, மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், மாவட்ட தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஜில்லா, ஆறுமுகநேரி நகர செயலாளர் கல்யாணசுந்தரம், காயல்பட்டினம் நகர துணை செயலாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலம் ஊராட்சி பகுதியான குமார பனையூரில் புதிதாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது) 2018-19-ம் ஆண்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து அப்பகுதியில் பகுதி மக்களின் நலனிற்காக சமுதாய நலக்கூடம் கட்ட கனிமொழி அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் முடிந்து திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பிரம்மசக்தி, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், சேர்ந்தபூமங்கலம் பஞ்சாயத்து தலைவர் சந்திரா மாணிக்கவாசகம், குமார பனையூர் தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவீன்குமார் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் ஆத்தூர் நகர தி.மு.க. செயலாளர் முருகப்பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர் கமிட்டி செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

கோவில்பட்டி புது ரோட்டில் 11-வது வார்டு தி.மு.க. செயலாளர் வேலுச்சாமி ஈகா முடி திருத்தும் நிலையம் நடத்தி வருகிறார். இங்கு படிப்பகம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இங்கு நேற்று முன்தினம் இரவு கனிமொழி எம்.பி. வருகை தந்து படிப்பகத்தை திறந்து வைத்து 100 புத்தகங்களை பரிசளித்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பாரதிநகர் 2-வது தெருவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர் வீட்டில் மகளிர் சுய உதவி குழுவினரால் நடத்தப்படும் நாப்கின் தயாரிக்கும் நிலையத்திற்கு கனிமொழி எம்.பி. சென்று ரூ.4 லட்சம் செலவில் நாப்கின் தயாரிக்கும் 6 எந்திரங்களை வழங்கினார். இதே நிகழ்ச்சியில் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் உள்ள கபடி அணிக்கு மைதானத்தில் விரிக்கும் 230 மேட்டுகள், சீருடைகள் மற்றும் உபகரணங்களை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.

பின்னர் கனிமொழி எம்.பி. கோவில்பட்டியில் உள்ள தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று கடந்த 15-ந் தேதி நடந்த தினேஷ் -சுபரஞ்சிதா திருமண தம்பதிகளை வாழ்த்தி நினைவு பரிசு வழங்கினார்.

Next Story