12 மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


12 மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 12 Jun 2021 10:59 PM GMT (Updated: 12 Jun 2021 10:59 PM GMT)

12 மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார்.

சேலம்,

தமிழகத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.

டெல்டா பாசனத்திற்கு அணையில் உள்ள நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதி அல்லது அதற்கு முன்னதாகவோ, பின்னரோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அதன்பேரில், மேட்டூர் அணையில் நடப்பு ஆண்டு 96 அடிக்கு மேல் நீர் இருப்பு இருப்பதால் குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அணையின் வலது கரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்விசை பட்டனை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தார்.

பின்னர் அணையின் மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீரில் மு.க.ஸ்டாலின் பூக்களையும், நெல் உள்ளிட்ட தானியங்களையும் தூவி வரவேற்றார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அவர்களும் தண்ணீரில் மலர்களை தூவி வணங்கினர். நேற்று முதலில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்கு ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாக இதுவரை 11 ஆண்டுகள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதியில் (இந்தாண்டு சேர்த்து) 18-வது ஆண்டாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க 59 ஆண்டுகள் காலதாமதமாக அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தாண்டில் குறித்த நாளான நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

மேட்டூர் அணையில் இருந்து நேற்று திறந்து விடப்பட்ட தண்ணீர், கடைமடை வரை செல்லும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ரூ.65 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் 647 நீர் ஆதாரங்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இந்த மாதம் இறுதி வரையில் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். அதன்பிறகு அடுத்த மாதம் (ஜூலை) வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து படிப்படியாக வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்படும். ஆகஸ்டு மாதத்தில் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக நீர் தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, மாவட்ட கலெக்டர் கார்மேகம், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், பொன்.கவுதம சிகாமணி, செந்தில்குமார், சின்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story