மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு தனி நல வாரியம் வைகோ வலியுறுத்தல்


மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு தனி நல வாரியம் வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Jun 2021 1:41 AM GMT (Updated: 19 Jun 2021 1:41 AM GMT)

மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு தனி நல வாரியம் வைகோ வலியுறுத்தல், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னை,

தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் உள்ளனர். இவர்களுடன், குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கிறார்கள். இசைத்தொழிலை நம்பியே இவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

கோவில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் மங்கல நிகழ்வுகள், அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மேடை மெல்லிசை கச்சேரிகள் நடந்து வந்தன. கொரோனா ஊரடங்கு அவர்களது வாழ்க்கையை அடியோடு முடக்கிவிட்டது.

இந்த தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் செய்ய தெரியாத கலைஞர்கள், ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இசை நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. உணவகங்களிலும், சிறு கடைகளிலும் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கலைகளை வளர்த்த தமிழகத்தில், இசை கலைஞர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கின்ற வகையில், காவல்துறையின் உரிய அனுமதியுடன் இசை கச்சேரிகள் நடத்துவதற்கு உரிய அனுமதி தர வேண்டும். மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு, உதவித் தொகைகள் கிடைத்திட அவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story