சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி கடைகளை இரவு 7 மணி வரை திறக்கலாம்


சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி கடைகளை இரவு 7 மணி வரை திறக்கலாம்
x
தினத்தந்தி 20 Jun 2021 11:25 PM GMT (Updated: 20 Jun 2021 11:25 PM GMT)

தமிழகத்தில் 28-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சில தளர்வுகளுடன் ஊரடங்கு

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு 30-6-2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று நோய்ப்பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

3 வகையாக மாவட்டங்கள் பிரிப்பு

மேலும், இந்த ஊரடங்கு 21-ந் தேதி (இன்று) காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், கடந்த 19-ந் தேதி மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், நோய்த்தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த்தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த ஊரடங்கை 28-ந் தேதி காலை 6 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் மாவட்டங்களில் உள்ள நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுள், வகை 1-ல் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி

மேலும், வகை 2-ல் உள்ள அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன் விவரம் வருமாறு:-

மாலை 7 மணி வரை அனுமதி

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (பேக்கரி) பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் மூலம் உணவு வினியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

* இதர மின் வணிக சேவை நிறுவனங்கள், இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அரசு அலுவலகங்கள்

* அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* சார்பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்.

* அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

தொழிற்சாலைகளுக்கு அனுமதி

* இதர தொழிற்சாலைகள் 33 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் வயர்கள் விற்பனை செய்யும் கடைகள், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், ஹார்டுவேர் கடைகள், வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் வினியோகஸ்தர்களது கடைகள், கல்வி புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகன வினியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள், காலணிகள் விற்பனை செய்யும் கடைகள், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், மண்பாண்டம் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

பள்ளி-கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

* மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் எந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள், சேவை கோருபவர் வீடுகளுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.

* செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* அனைத்து வகையான கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.

* பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.

திரையரங்குகளில் பராமரிப்பு பணி

* காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.

* திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும், வாடகை டாக்சிகளில், ஓட்டுனர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

* வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்

வகை 3-ல் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன் விவரம் வருமாறு:-

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

இ-பதிவு தேவையில்லை

* உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (பேக்கரி) பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் மூலம் உணவு வினியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

* இதர மின் வணிக சேவை நிறுவனங்கள், இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* குழந்தைகள், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படும்.

கட்டுமான பணிகளுக்கு அனுமதி

* சிறார்களுக்கான கண்காணிப்பு, பராமரிப்பு, சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.

* அனைத்து வகையான கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.

* அனைத்து அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்.

* அனைத்து தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.

* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

சுயதொழிலுக்கு இ-பதிவு

* இதர தொழிற்சாலைகளும் 50 சதவீதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

* மின் பணியாளர் (எலக்ட்ரீசியன்), பிளம்பர்கள், கணினி மற்றும் எந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள், சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.

டீக்கடைகளில் பார்சல் சேவை

* மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் வயர்கள் விற்பனை செய்யும் கடைகள், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள், ஹார்டுவேர் கடைகள், வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், கல்வி புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகன வினியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள், வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் வினியோகஸ்தர்களது கடைகள், காலணிகள் விற்பனை செய்யும் கடைகள், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், பாத்திரக்கடைகள், பேன்ஸி, அழகு சாதனப்பொருட்கள், போட்டோ-வீடியோ கடைகள், சலவைக் கடைகள். தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், மண்பாண்டம் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* டீக்கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

* மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், செல்பேசி மற்றும் அதனைச்சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

விளையாட்டு போட்டிகளுக்கு அனுமதி

* சாலையோர உணவு கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதிக்கப்படும்.

* கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், கட்டுமானப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.

* பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் அனுமதிக்கப்படும்.

பஸ் போக்குவரத்து தொடக்கம்

* மாவட்டத்துக்குள் பொது பஸ் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

* சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பஸ் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

இ-பதிவு கிடையாது

* வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டாக்சிகளில், ஓட்டுனர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

* வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

அவசியமின்றி வெளியே வரவேண்டாம்

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிடவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், ஜவுளிக்கடைகள் நகை கடைகள், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்பட வழிபாட்டு தலங்கள் ஆகியவை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

Next Story