அரியலூர், கடலூர் மாவட்டங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கோரிய ஓ.என்.ஜி.சி. நிறுவன விண்ணப்பம் நிராகரிப்பு


அரியலூர், கடலூர் மாவட்டங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கோரிய ஓ.என்.ஜி.சி. நிறுவன விண்ணப்பம் நிராகரிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2021 9:17 PM GMT (Updated: 22 Jun 2021 9:17 PM GMT)

அரியலூர், கடலூர் மாவட்டங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சென்னை,

வாழ்வாதாரத்தை சிதைக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்ற நம்பிக்கை உள்ளது. வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட சட்டத்தை அவமதிக்கும் வகையில் எண்ணெய் கிணறு அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்வது தொடர்பாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் விண்ணப்பித்துள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு தி.மு.க. அரசு துணை போகாது என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதற்கு பதில் அளித்து, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

அனுமதி வழங்கப்படாது

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் அரியலூர், கடலூர் மாவட்டத்தில் 15 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம், அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் எண்ணெய் கிணறு அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யவோ, உற்பத்தி செய்யவோ அனுமதி வழங்கப்படாது.

ஆனால், இந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அல்லாத பகுதிகள் என்பதால், இந்த இடங்களில் எண்ணெய் கிணறுகளை அமைக்கலாம் என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை தவிர்த்து மற்ற இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க விண்ணப்பித்தால், அதன் பாதிப்புகள் குறித்து கண்டறிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறதா? என்பதை கண்டறிய விரைவில் வல்லுனர் குழு அமைக்கப்படும்.

ஆய்வறிக்கை

அந்த குழு, மண்ணின் வளம், நிலத்தடி நீர் பிரச்சினை குறித்தும் ஆராயும். பொதுமக்களிடம் கருத்து கேட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கும். இதுபோன்ற மண் சார்ந்த விஷயங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை சமர்பிக்க குழு அமைக்கப்படும்.

கடலூரில் 10, அரியலூர் 5 இடங்களில் எண்ணெய் கிணறு அமைப்பது தொடர்பாக, ஓ.என்.ஜி.சி.யின் விண்ணப்பத்தின் மீதான பரிசீலனைக்கு பிறகு, கடந்த 21-ந் தேதி நிராகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் மீத்தேன், ‘ஷேல்' கேஸ் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story